ADDED : மார் 29, 2024 11:28 PM

குவஹாத்தி: வட கிழக்கு மாநிலமான அசாமில், ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, மாநிலம் முழுக்க அமலில் இருந்த ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம், 2022 ஏப்ரலில் திரும்ப பெறப்பட்டது.
தேடுதல் நடவடிக்கை
அதன் பின், பதற்றமான பகுதிகளில் மட்டும் நடைமுறை செய்யப்படுகிறது.
இந்த சட்டம், வாரன்ட் இல்லாமல் எங்கு வேண்டுமானாலும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடவும், யாரை வேண்டுமானாலும் கைது செய்யவும் பாதுகாப்பு படையினருக்கு அதிகாரம் வழங்குகிறது.
ஆறு மாதங்களுக்கு ஒரு முறை இந்த சட்டத்தை நீட்டிக்க வேண்டும்.
அதன்படி தின்சுகியா, திப்ருகர், சராய்தியோ, சிவசாகர் ஆகிய மாவட்டங்களில் பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருவதால், அங்கு மட்டும் இந்த சட்டம் அமலில் உள்ளது.
கடைசியாக அக்டோபர் முதல் மார்ச் வரையிலான ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில், இந்த நான்கு மாவட்டங்களில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை அப்படியே தொடர வேண்டிய தேவை இருப்பதாக, மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அசாம் அரசு அறிக்கை சமர்ப்பித்தது.
ஒப்புதல்
மத்திய உள்துறை அமைச்சக ஒப்புதலை அடுத்து, இப்பகுதியில் செப்டம்பர் வரையிலான மேலும் ஆறு மாதங்களுக்கு ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

