ADDED : ஆக 01, 2024 12:30 AM
பெங்களூரு : நாய் இறைச்சி விவாதம் ஏற்பட்ட பின், விழித்துக்கொண்ட பெங்களூரு மாநகராட்சி, இறைச்சி கடைகள், 'லைசென்ஸ்' பெறுவதை கட்டாயமாக்கி உள்ளது.
சில நாட்களுக்கு முன், ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் இருந்து ஆட்டு இறைச்சி பெட்டிகள், பெங்களூரின் சங்கொல்லி ராயண்ணா ரயில் நிலையத்துக்கு வந்திறங்கின.
இந்த இறைச்சியுடன் நாய் இறைச்சி சேர்க்கப்பட்டதாக, ஹிந்து அமைப்பினர் குற்றம்சாட்டி போராட்டம் நடத்தினர். இறைச்சியை கொண்டு செல்ல விடாமல் தடுத்தனர்.
இந்த சம்பவத்துக்கு பின், உஷாரான பெங்களூரு மாநகராட்சி இறைச்சி வியாபாரிகள், வர்த்தக லைசென்ஸ் பெறுவதை கட்டாயமாக்கியது.
இது குறித்து, பெங்களூரு மாநகராட்சியின் சுகாதாரப்பிரிவு சிறப்பு கமிஷனர் சுரல்கர் விகாஸ் கிஷோர் கூறியதாவது:
இறைச்சி விற்பனை செய்ய, வியாபாரிகள் உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு ஆணையத்தின் லைசென்ஸ் வைத்திருப்பர். ஆனால், பெங்களூரு மாநகராட்சியிடம் லைசென்ஸ் பெறுவதில்லை. இனி, இவர்கள் மாநகராட்சியிடம் வர்த்தக லைசென்ஸ் பெறுவது கட்டாயம்.
ஆட்டிறைச்சி மட்டுமல்ல, மீன், சிக்கன் உட்பட எந்த இறைச்சி விற்றாலும் லைசென்ஸ் பெற வேண்டும். வியாபாரிகள் வர்த்தக லைசென்ஸ் பெறுவது குறித்து, கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டி நகர் மற்றும் ரூரல் பகுதிகளில், செயல்படுத்த வேண்டிய சட்ட வரைவு குறித்து ஆய்வு செய்து, தலைமை கமிஷனரிடம், அறிக்கை அளிக்கும்.
மாநகராட்சியின் கால்நடை மற்றும் சுகாதார பிரிவு அதிகாரிகள் இறைச்சி கடைகளுக்கு சென்று, அவற்றின் துாய்மை, சுகாதாரம் குறித்து ஆய்வு செய்வர். வேறு மாநிலங்களில் இருந்து, இறைச்சி கொண்டு வந்து விற்பனை செய்யும் வியாபாரிகளும், வர்த்தக லைசென்ஸ் பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.