ADDED : மார் 23, 2024 06:47 AM

பெங்களூரு: ம.ஜ.த.,வில் இருந்து விலகிய எம்.எல்.சி., மரிதிப்பேகவுடா, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் முன்னிலையில், காங்கிரசில் நேற்று ஐக்கியம் ஆனார்.
கர்நாடக சட்ட மேலவைக்கு, ஆசிரியர் தொகுதியில் இருந்து, நான்கு முறை ம.ஜ.த., சார்பில் எம்.எல்.சி.,யாக தேர்வு செய்யப்பட்டவர் மரிதிப்பேகவுடா, 64. நேற்று முன்தினம் தனது எம்.எல்.சி., பதவியை, ராஜினாமா செய்தார். சிறிது நேரத்தில் ம.ஜ.த.,வில் இருந்தும் விலகினார்.
இந்நிலையில் பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா முன்னிலையில், மரிதிப்பேகவுடா நேற்று காங்கிரசில் இணைந்தார்.
முன்னாள் எம்.எல்.சி., அப்பாஜி கவுடா உட்பட, மேலும் சிலரும் காங்கிரசில் இணைந்தனர். மரிதிப்பேகவுடா மாண்டியாவை சேர்ந்தவர். அங்கு செல்வாக்கு மிக்க தலைவராக இருந்தார்.
கடந்த லோக்சபா தேர்தலில் சீட் எதிர்பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை. குமாரசாமியின் மகன் நிகிலை வேட்பாளராக நிறுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் கட்சியில இருந்து ஓரம்கட்டப்பட்டார். அதிருப்தியில் இருந்த அவரை, கொக்கி போட்டு துாக்கி உள்ளார், துணை முதல்வர் சிவகுமார்.
பெங்களூரு ரூரலில் சிவகுமாரின் தம்பி சுரேஷை தோற்கடிக்க, பா.ஜ., வேட்பாளராக மஞ்சுநாத்தை களம் இறக்கி விட்டார் குமாரசாமி.
அவருக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் வகையில், மாண்டியா, ராம்நகர், ஹாசன் மாவட்டங்களை சேர்ந்த, ம.ஜ.த., தலைவர்கள், தொண்டர்களை வலை விரித்து பிடித்து வருகிறார். இதன்மூலம் குமாரசாமிக்கு பதிலடி கொடுத்து உள்ளார்.
லோக்சபா தேர்தலில் மாண்டியாவில், குமாரசாமி அல்லது அவரது மகன் நிகில் போட்டியிடலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த நேரத்தில் மரிதிப்பேகவுடா காங்கிரசில் இணைந்தது, ம.ஜ.த.,வுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

