ADDED : மே 26, 2024 09:15 PM

சிட்டி மார்க்கெட்: துாங்கி கொண்டு இருந்த இருவரின் தலையில், கல்லை போட்டு கொலை செய்த, 'சைக்கோ கொலையாளி கைது செய்யப்பட்டு உள்ளார்.
பெங்களூரு ஜெயநகர் 7வது கிராசில் கடந்த 12ம் தேதி இரவு, சாலையோரம் துாங்கி கொண்டு இருந்தவர் தலையில் கல்லை போட்டு, மர்ம நபர்கள் கொலை செய்தனர். இதே பாணியில் கடந்த 18ம் தேதி, சிட்டி மார்க்கெட் வணிக வளாகத்திலும், ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்த இரு கொலையிலும், ஒரே கும்பல் ஈடுபட்டதாக தெரிய வந்தது.
கொலை நடந்த இரு இடங்களிலும் உள்ள, கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளில், ஒரு வாலிபர் புகைப்படம் சிக்கியது. அந்த வாலிபர் தான், கொலைகளை செய்தது உறுதியானது. நேற்று முன்தினம் சிட்டி மார்க்கெட் போலீசார், அந்த நபரை கைது செய்தனர்.
விசாரணையில் பனசங்கரியின் கிரிஷ், 35 என்று தெரிந்தது. இரவில் சாலையோரம் துாங்குபவர்களை பார்த்தால், அவர்கள் தலையில் கல்லை போட்டு கொல்ல வேண்டும் என்ற, சைக்கோ மனநிலை கிரிஷுக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் இருவரை கொன்றதை ஒப்புக்கொண்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

