ADDED : ஜூலை 04, 2024 01:58 AM
புதுடில்லி:“மாநிலத்தில் வரும் 11ம் தேதி முதல் மரக்கன்றுகள் நடும் இயக்கம் துவங்கும்,” என, மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்தார்.
இதுகுறித்து நேற்று முன்தினம் அவர் கூறியதாவது:
கடந்த ஆண்டு 52 லட்சம் மரக்கன்றுகளை நடப்பட்டது. நடப்பு ஆண்டில் மாநிலம் முழுவதும் 64 லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுஉள்ளது.
பசுமை இலக்கு
இந்த இயக்கத்தில் பொதுமக்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில், 7,74,000 மரக்கன்றுகள் இலவசமாக வினியோகிக்கப்படும்.
வரும் 11ம் தேதி முதல் மரக்கன்றுகள் இயக்கம் துவக்கப்படும். இது ஆகஸ்ட் 9ம் தேதி வரை தொடரும். தற்போது 30 சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
நரேலா சட்டசபைத் தொகுதியில் இலவச மரக்கன்றுகள் வினியோகத்துடன் இயக்கம் துவக்கப்படும். அனைத்துத் துறைகளின் ஒத்துழைப்புடன் பசுமை இலக்கு எட்டப்படும்.
கோடைகால செயல் திட்டத்தில் மரக்கன்று நடுவது முக்கியமான அங்கம். பசுமை மண்டலத்தை அதிகரிக்கவும், நகரின் மாசுபாட்டைக் குறைக்கவும் இதுபோன்ற இயக்கம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.
இரண்டு கோடி
காலநிலை மாற்றத்திற்கு பசுமைப்பகுதியை அதிகரிப்பது மட்டுமே நம்மை காப்பாற்றும்.
சுற்றுச்சூழலை மேம்படுத்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு கோடி மரங்களை நட வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பதவியேற்ற நான்காவது ஆண்டிலேயே அந்த இலக்கை எட்டினோம்.
இவ்வாறு அவர் கூறினார்.