ADDED : மார் 26, 2024 09:31 PM

மைசூரு: லோக்சபா தேர்தலில் மைசூரு தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற, முதல்வர் சித்தராமையா மும்முரமாக வேலை செய்கிறார். பா.ஜ., முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஆதரவாளர்களை காங்கிரசுக்கு இழுக்கும் வேலைகள், தீவிரமாக நடந்து வருகிறது.
கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் சொந்த ஊர், மைசூரு அருகே உள்ள சித்தராமயனஹுண்டி கிராமம். கடந்த 2013 முதல் 2018 வரை, சித்தராமையா முதல்முறை முதல்வராக இருந்த போது, 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில், மைசூரு தொகுதியில் பா.ஜ., வெற்றி பெற்றது.
பத்திரிகையாளராக இருந்து அரசியலுக்கு வந்த பிரதாப் சிம்ஹா, முதல் தேர்தலில் சாதித்து காட்டினார். சொந்த ஊரில் கட்சியை வெற்றி பெற வைக்க முடியாததால், சித்தராமையா விமர்சனத்திற்கு ஆளானார்.
கடந்த 2019 தேர்தலிலும் பிரதாப் சிம்ஹா வெற்றி பெற்றார். நடக்க இருக்கும் லோக்சபா தேர்தலிலும், பிரதாப் சிம்ஹா மூன்றாவது முறையாக போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதனால் அவரை வீழ்த்த, முதல்வர் சித்தராமையா தயாராகி வந்தார். மகன் யதீந்திராவை 'பட்டை' தீட்டி வந்தார். ஆனால் பிரதாப் சிம்ஹாவுக்கு பதிலாக, மன்னர் குடும்பத்தின் யதுவீர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் முதல்வர் தனது திட்டத்தை மாற்றிக் கொண்டார்.
எடியூரப்பா ஆதரவாளர்
யதீந்திரா போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மைசூரு காங்கிரஸ் வேட்பாளராக லட்சுமண் அறிவிக்கப்பட்டு உள்ளார். அவரை எப்படியாவது வெற்றி பெற வைக்க வேண்டும் என்று, மைசூரு மாவட்ட எம்.எல்.ஏ.,க்களுக்கு, சித்தராமையா உத்தரவிட்டு உள்ளார். முதல்வரும் மைசூரில் தங்கி இருந்து, தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், மைசூரைச் சேர்ந்த பா.ஜ., பிரமுகரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பாவின் தீவிர ஆதரவாளருமான ராஜிவை, காங்கிரசுக்கு இழுக்கும் முயற்சியில், சித்தராமையா வெற்றி பெற்று உள்ளார். நாளை காங்கிரசில் ராஜிவ் இணைகிறார்.
இதுதவிர கடந்த 2018 தேர்தலில் வருணா தொகுதியில் பா.ஜ., வேட்பாளராக போட்டியிட்ட சதானந்தாவையும், காங்கிரசுக்கு இழுக்கும் முயற்சிகளும் நடக்கிறது. சதானந்தாவும் எடியூரப்பா, விஜயேந்திராவின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
பா.ஜ., ஆட்சியில் இருந்த போது, மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணைய தலைவராக ராஜிவ் பணியாற்றினார். கடந்த சட்டசபை தேர்தலில் கிருஷ்ணராஜா தொகுதியில், பா.ஜ., சீட் எதிர்பார்த்தார்.
சீட் வாங்கி தருவதாக எடியூரப்பாவும் உறுதி அளித்து இருந்தார். ஆனால், கடைசி நேரத்தில் ஸ்ரீவத்சாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. இதனால் அதிருப்தியில் இருந்த அவரிடம், பா.ஜ., - எம்.எல்.ஏ., சோமசேகர் மூலம், காங்கிரஸ் பேச்சு நடத்தி இழுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
காங்., பேனரில் சோமசேகர் படம்
பெங்களூரு யஷ்வந்த்பூர் பா.ஜ., - எம்.எல்.ஏ., சோமசேகர், காங்கிரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், ராஜிவ் காங்கிரசில் இணைய உள்ளதை ஒட்டி, அவரை கட்சிக்கு வரவேற்கும் விதமாக, மைசூரு நகரில் காங்கிரஸ் தலைவர்கள் படத்துடன் கூடிய, பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த பேனர்களில் சோமசேகரின் படமும் உள்ளது. சோமசேகரும் கூடிய விரைவில், பா.ஜ.,வில் இருந்து விலகி, காங்கிரசில் இணைவார் என்ற பேச்சு அடிபடுகிறது.

