ADDED : மே 17, 2024 05:47 AM
பெங்களூரு : வீடுகளுக்குள் புகும் பாம்புகளை பிடிக்க, பெங்களூரு மாநகராட்சி, 'ஹெல்ப்லைன் எண்' வெளியிட்டு உள்ளது.
பெங்களூரில் கடந்த சில தினங்களாக, மாலை நேரத்தில் கோடை மழை பெய்கிறது. ஆனாலும் பகல் நேரத்தில் வெயில் அடிக்கிறது. கோடை வெயிலில் இருந்து தப்பிக்கும் வகையில், குளிர்ச்சியான இடங்களை தேடி பாம்புகள் வருவது வழக்கம். இதனால் வீடுகள், தோட்டங்களில் பாம்புகள் தஞ்சம் அடையும் வாய்ப்பு உள்ளது.
பாம்புகளை பார்க்கும் மக்கள், அவற்றை அடித்து கொல்லவும் வாய்ப்பு உள்ளது. இதனை தடுக்கும் வகையில் பாம்புகளை பிடிக்க, பெங்களூரு மாநகராட்சி 99027 94711 என்ற, 'ஹெல்ப்லைன் எண்'ணை வெளியிட்டு உள்ளது.
இந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு, வீட்டின் முகவரியை கூறினால் போதும், மாநகராட்சி ஊழியர்கள் வந்து, பாம்பை பிடித்து சென்று விடுவர். மே மாதம் பாம்புகளின் இனப்பெருக்க காலம். இதனால் வீடுகளில் புகும் பாம்புகளை பார்த்து, அச்சப்பட்டு அடித்து கொல்ல வேண்டாம் என்றும், மாநகராட்சி வேண்டுகோள் விடுத்து உள்ளது.
***

