ADDED : ஏப் 04, 2024 03:31 AM

பாகல்கோட் : தேர்தல் 'சீட்' கிடைக்காமல் அதிருப்தியில் இருந்த, காங்கிரசின் வீணா காசப்பனவரை அமைச்சர்கள் சமாதானம் செய்துள்ளனர். கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய, அவரது கணவர் விஜயானந்த் சம்மதித்துள்ளார்.
பாகல்கோட் லோக்சபா தொகுதியில், வீணா காசப்பனவர் காங்கிரஸ் 'சீட்' எதிர்பார்த்தார். ஆனால் சர்க்கரை துறை அமைச்சர் சிவானந்த் பாட்டீலின் மகள் சம்யுக்தாவுக்கு, சீட் வழங்கப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த வீணா காசப்பனவர், சுயேச்சையாக போட்டியிட தயாரானார்.
இந்நிலையில் பாகல்கோட்டின், காங்கிரஸ் அலுவலகத்தில் அமைச்சர்கள் திம்மாபுரா, சிவானந்த் பாட்டீல் உட்பட, மூத்த தலைவர்கள் சமாதான பேச்சு நடத்தினர். கூட்டத்ததில், வீணாவுக்கு பதிலாக, அவரது கணவரும், ஹுன்குந்த் எம்.எல்.ஏ.,வுமான விஜயானந்த் பங்கேற்றார். சமாதான பேச்சு வெற்றி அடைந்தது. “காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வீணா பணியாற்றுவார்,” என, விஜயானந்த் உறுதி அளித்தார்.
அவர் கூறியதாவது:
லோக்சபா தேர்தலில், நாங்கள் ஒற்றுமையாக பணியாற்றுவோம். கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக உழைப்போம். என் மனைவிக்கு சீட் கிடைக்காததால், எனக்கும் வருத்தம் இருந்தது.
ஆண்கள் எதையும் விரைவில் மறந்துவிடுவர். பெண்கள் மறக்க சிறிது அவகாசம் வேண்டும். வீணாவும் பிரசாரத்துக்கு வருவார். அவரது அதிருப்தியை சரி செய்வோம். அவர் மாவட்ட பஞ்சாயத்து தலைவராக இருந்தவர். விரைவில் அனைத்தும் சரியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் சிவானந்த் பாட்டீல் கூறியதாவது:
வீணா காசப்பனவர் தன் ஆதரவாளர்களுடன் கூட்டம் நடத்தி உள்ளார். நலம் விரும்பிகளுடன் ஆலோசனை நடத்துவதில் தவறென்ன? வீணாவும், எங்கள் வீட்டின் உறுப்பினர் தான்; அவர் எங்களுடன் இருப்பார்.
வீணா தேர்தலில் போட்டியிட்டபோது, என் மகளை போன்று நினைத்து அவருக்காக பணியாற்றி உள்ளேன். அதே போன்று என்னை தந்தையாக நினைத்து, எனக்காக வீணா பணியாற்றினார். எங்களுக்குள் கருத்து வேறுபாடு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனால், காங்கிரஸ் தலைவர்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.

