வசந்த பஞ்சமி நாளில் கங்கையில் புனித நீராடிய 1 கோடி பக்தர்கள்
வசந்த பஞ்சமி நாளில் கங்கையில் புனித நீராடிய 1 கோடி பக்தர்கள்
ADDED : ஜன 24, 2026 02:58 AM

பிரயாக்ராஜ்: உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகர மேளாவின் முக்கிய நிகழ்வான வசந்த பஞ்சமி தினத்தில், 1 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் நேற்று புனித நீராடினர்.
உ.பி.,யின் பிரயாக்ராஜி ல் கடந்த 3ம் தேதி துவங்கிய மகர மேளா நிகழ்வு பிப்ரவரி 15 வரை நடக்கிறது.
இதையொட்டி கங்கை, யமுனை, புராண நதியான சரஸ்வதி பாயும் பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராட சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 25,000 கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
அவற்றை சுத்தம் செய்யும் பணியில் 3,500 துாய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பக்தர்கள் பாதுகாப்பு மற்றும் வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் 10,000க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இது தவிர வெளிமாநில பக்தர்கள் வசதிக்காக பைக் டாக்சி உள்ளிட்ட போக்குவரத்து சேவைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மகர மேளாவின் முக்கிய நாளான மகர சங்கராந்தி மற்றும் வசந்த பஞ்சமி உள்ளிட்ட நாட்களில் திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் நீராடுவது வழக்கம்.
இந்நிலையில் வசந்த காலத்தின் துவக்க நாளான வசந்த பஞ்சமி, நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதையொட்டி திரிவேணி சங்கமத்தில் புனித நீராட, நேற்று முன் தினம் இரவு முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.
நேற்று முன்தினம் இரவு துவங்கி நேற்று காலை 8:00 மணி வரை, 1.04 கோடி பேர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியதாக மகர மேளா நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

