ADDED : ஆக 08, 2025 03:37 AM
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் இருசக்கர வாகனத்தில் சென்றபடி, இரண்டே நாட்களில், 25 தெரு நாய்களை சுட்டுக் கொன்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ராஜஸ்தானின் ஜுன்ஜுனு மாவட்டம் தும்ரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஷியோசந்த் பவேரியா. இவர் தன் நண்பருடன் குமாவஸ் பகுதியில் பைக்கில் துப்பாக்கியுடன் சென்று, அங்கு சுற்றித்திரியும் நாய்களை சரமாரியாக சுட்டுக்கொன்றார்.
இதில் ரத்தம் சொட்ட, சொட்ட தெருக்கள் மற்றும் வயல் வெளிகளில் நாய்கள் சடலமாக கிடக்கின்றன. இவ்வாறு 25க்கும் மேற்பட்ட தெரு நாய்களை இரண்டே நாட்களில் அவர் சுட்டுக் கொன்றுள்ளார். இதை நேரில் கண்ட ஒருவர், படம் பிடித்து சமூக வலை தளத்தில் வெளியிட்டார்.
இதை கண்ட கிராமவாசிகள் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். நாயை சுட்டுக்கொன்ற நபர்களை பிடித்து கடும் தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.