ADDED : செப் 27, 2024 08:05 AM
பாகல்கோட்: கார், லாரி நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில், நான்கு பேர் உயிரிழந்தனர்.
பாகல்கோட், ஹுன்குந்த் தன்னுார் கிராம பகுதியில் நேற்று அதிகாலை 3:00 மணிக்கு ஒரு கார் சென்றது.
எதிர் திசையில் வந்த லாரியும், காரும் கண் இமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் மோதின.
விபத்து பற்றி அறிந்ததும் ஹுன்குந்த் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். காருக்குள் இருந்தவர்களை மீட்க முயன்றனர். ஆனால் இடிபாடுகளில் சிக்கி காருக்குள் இருந்த நான்கு பேரும் இறந்தது தெரிந்தது.
போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர்கள் விஜயபுரா மாவட்டம், பிதரகுந்தி கிராமத்தை சேர்ந்த லட்சுமண் வத்தார், 55, பைலப்பா பிராதார், 45, ராமண்ணா நாயக், 50, கார் டிரைவர் ரபீக் முல்லா, 25 என்பது தெரிந்தது.
விஜயநகரா ஹுலிஹம்பா கோவிலுக்கு சென்று விட்டு திரும்பியபோது, விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

