ADDED : நவ 28, 2024 05:26 AM
துமகூரு : சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கி தயாரித்து விற்று வந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
துமகூரு, குப்பியின் திப்பூர் கிராமத்தில் வசிக்கும் மதுசந்திரா, சிவகுமார் ஆகியோர் துப்பாக்கியுடன், ஆகஸ்ட் 12ம் தேதி இரவு 10:30 மணியளவில், காட்டில் வேட்டையாட சென்றனர். இதை பார்த்த அப்பகுதியில் வசிக்கும் தர்ஷன், “காட்டில் வேட்டையாடக் கூடாது,” என, அறிவுரை கூறினார்.
அப்போது ஏற்பட்ட கைகலப்பில், துப்பாக்கி தவறி கீழே விழுந்து வெடித்தது. இதில் குண்டு பாய்ந்து தர்ஷனின் மனைவி காயம் அடைந்தார். இது தொடர்பாக குப்பி போலீசார் சிவகுமாரையும், மது சந்திராவையும் விசாரித்தபோது, சட்டவிரோதமாக துப்பாக்கி தயாரித்து விற்பது கண்டுபிடிக்கப்பட்டது.
துப்பாக்கி தயாரிக்கும் கும்பலை கைது செய்ய, துமகூரு எஸ்.பி., அசோக், தனிப்படை அமைத்தார். இப்படையினர் பல கோணங்களில் விசாரணை நடத்தி, மதுசந்திரா, 24, மதுசந்திரா, 29, மஞ்சுநாத், 39, திம்மராஜு, 45, ரவீஷ், 50, இம்ரான் பாஷா, 40, ஆகியோரை நேற்று முன் தினம் கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து துப்பாக்கியின் உதிரி பாகங்கள், துப்பாக்கி தயாரிக்க பயன்படுத்தப்படும் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திம்மராஜுவும், ரவீஷும் சட்டவிரோதமாக துப்பாக்கி தயாரித்தனர். இதற்கு தேவையான மிஷினரி வேலைகளை, இம்ரான் லேத் மற்றும் டிரில்லிங் மிஷின் மூலமாக செய்து கொடுத்துள்ளார்.
இவர்களிடம் நாட்டுத்துப்பாக்கி வாங்கியவர்கள், வன விலங்குகளை வேட்டையாட பயன்படுத்தியது, விசாரணையில் தெரிய வந்தது.