பெங்களூரில் 60 பைக்குகள் திருட்டு; தமிழகத்தை சேர்ந்த நால்வர் கைது
பெங்களூரில் 60 பைக்குகள் திருட்டு; தமிழகத்தை சேர்ந்த நால்வர் கைது
ADDED : ஜன 07, 2026 01:09 AM

பெங்களூரு: பெங்களூரில் பைக் திருட்டில் ஈடுபட்ட, தமிழகத்தின் வேலுார், திருப்பத்துார் மாவட்டங்களை சேர்ந்த, நால்வர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து, 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 60 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கண்காணிப்பு கேமரா கர்நாடக மாநிலம், பெங்களூரு கே.ஆர்.புரம் அய்யப்பா நகரில் வசிக்கும் ஆகாஷ், 24; என்பவர், கடந்த ஆண்டு நவம்பர் 11ம் தேதி இரவு, தன் பைக்கை வீட்டின் முன் நிறுத்தி இருந்தார்.
மறுநாள் காலை, பைக்கை காணவில்லை. கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, பைக் லாக்கை உடைத்து, இருவர் திருடி சென்றது தெரிந்தது. ஆகாஷ் அளித்த புகாரில், கே.ஆர்.புரம் போலீசார் விசாரித்தனர்.
கண்காணிப்பு கேமரா காட்சிகள், 'மொபைல் போன் டவர்' அடிப்படையில் விசாரித்து, பைக் திருட்டில் ஈடுபட்ட, தமிழகத்தின் வேலுார் மாவட்டம், ஒடுகத்துாரை சேர்ந்த ரஞ்சித் குமார், 28, யுவராஜ், 22; மணிகண்டன், 20, திருப்பத்துார் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லுாரி மாணவர் வினோத் குமார், 18, ஆகியோரை, டிச., 31ல் கைது செய்தனர்.
பறிமுதல்
இவர்கள் கொடுத்த தகவலின்படி, ஜோலார்பேட்டை, திருப்பத்துாரில் காலி இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த, 60 ஹீரோ ஹோண்டா ஸ்பிளண்டர் பைக்குகளை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு, 50 லட்சம் ரூபாய்.
பைக்குகளை திருடவே பெங்களூரு வந்து சென்ற நான்கு பேரும், 'ஸ்பிளண்டர்' பைக்குகளை மட்டும் குறிவைத்து திருடி உள்ளனர். ஒடுகத்துார் மற்றும் சுற்றியுள்ள இடங்கள் மலை பாங்கான பகுதி என்பதால், அங்கு போதிய போக்குவரத்து வசதி இல்லை. அங்கு வசிப்போருக்கு ஸ்பிளண்டர் பைக்குகள் ஏற்றவையாக இருப்பதால், இங்கு திருடி சென்று அங்கு விற்பதை வாடிக்கையாக வைத்திருந்தது தெரிந்தது.

