ADDED : ஜன 15, 2026 12:16 AM

லக்னோ: உத்தர பிரதேசத்தின் லக்னோவை சேர்ந்த நபரிடம், 'வாட்ஸாப்' செயலியில் பெண் போல் நடித்து நட்பாக பழகி, 1.92 கோடி ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
உ.பி.,யின் லக்னோவை சேர்ந்தவர் ஷலாப் பாண்டே. இவரிடம் பவிகா ஷெட்டி என்ற பெண், 'வாட்ஸாப்' தகவல் பரிமாற்ற செயலி மூலம் நட்பாக பழகியுள்ளார். இந்நிலையில், தங்களிடம் முதலீடு செய்தால், அதிக வட்டி தருவதாக பாண்டேவுக்கு ஆசை காட்டி உள்ளார் பவிகா.
அதை நம்பி பாண்டே, 1.92 கோடி ரூபாயை ஆன்லைன் மூலம் பரிமாற்றம் செய்துள்ளார். பின் பவிகாவை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து, பாண்டே போலீசில் புகார் அளித்தார்.
விசாரணை நடத்திய சைபர் குற்றப்பிரிவு போலீசார், லக்னோவின் மிஷ்ரிபுர் டிப்போ பகுதியை சேர்ந்த இம்ரான் காசி, 34, என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
போலீசார் கூறியதாவது:
இம்ரான் காசி என்ற இந்த நபர், பாண்டேவிடம் பவிகா என்ற பெயரில் பெண் போல பழகியுள்ளார். அதை நம்பி அவர் கூறிய பல்வேறு வங்கிக் கணக்குகளில், 1.92 கோடி ரூபாயை பாண்டே அனுப்பி உள்ளார். தன் கூட்டாளி ஷெசாத் உதவியுடன் போலி ஆதார் மற்றும் பான் கார்டுகள் உருவாக்கி, பல்வேறு வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை எடுக்க முயன்றபோது, இம்ரானை கைது செய்தோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

