மஹாராஷ்டிரா அமைச்சருக்கு கைது வாரண்ட்: நாசிக் கோர்ட் உத்தரவு
மஹாராஷ்டிரா அமைச்சருக்கு கைது வாரண்ட்: நாசிக் கோர்ட் உத்தரவு
ADDED : டிச 17, 2025 07:32 PM

நாசிக்: ஆவண மோசடி வழக்கில் தண்டனை உறுதியானதை தொடர்ந்து, மஹாராஷ்டிரா விளையாட்டு, இளைஞர் நலத்துறை அமைச்சர் மாணிக்ராவ் கோகடேவுக்கு நாசிக் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
தேசியவாத காங்கிரஸ்(அஜித்பவார்) பிரிவு கட்சியை சேர்ந்த மாணிக்ராவ் கோகடே, மஹாராஷ்டிராவில் விளையாட்டு, இளைஞர் நலத்துறை அமைச்சராக உள்ளார்.
இந்த நிலையில் மாணிக்ராவ் கோகடே மீது, கடந்த 1995 ஆம் ஆண்டு முதல்வரின் 10 சதவீத விருப்ப ஒதுக்கீட்டின் கீழ் அரசு குடியிருப்புகளை முறைகேடாகப் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த விவகாரத்தில் மாணிக்ராவ் கோகடே, அவரது சகோதரர் விஜய் கோகடே இருவரும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் என்று போலியான ஆவணங்கள், உறுதிமொழி பத்திரங்களை சமர்ப்பித்து நாசிக்கில் வீடுகளை பெற்றதாக கண்டறியப்பட்டது.
இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் முதலாவது மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றம், இருவருக்கும் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தது. இதை எதிர்த்து நாசிக் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மாணிக்ராவ் கோகடே மேல்முறையிடு மனு செய்திருந்தார்.
இந்த வழக்கில் நாசிக் நீதிமன்றம் நேற்று (டிசம்பர் 16) அவரது மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து, தண்டனையை உடனடியாக அமல்படுத்த உத்தரவிட்டது. அதை தொடர்ந்து இன்று மாணிக்ராவ் கோகடேவை உடனடியாக கைது செய்ய, அல்லது அவர் சரணடைய வேண்டும் என்று வாரண்ட் பிறப்பித்துள்ளது.
இதனையடுத்து மாணிக்ராவ் கோகடே, தனக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மேல்முறையீட்டு மனு, டிசம்பர் 19 ஆம் தேதி அன்று விசாரணைக்கு வருகிறது.

