2 ஆண்டு தலைமறைவாக இருந்தவர் மகனின் 'இன்ஸ்டாகிராம்' மூலம் கைது
2 ஆண்டு தலைமறைவாக இருந்தவர் மகனின் 'இன்ஸ்டாகிராம்' மூலம் கைது
ADDED : பிப் 16, 2025 07:11 AM

பெங்களூரு, : பெங்களூரு அடிதடி வழக்கில் இரண்டு ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவரை, மகனின் 'இன்ஸ்டாகிராம்' என்ற சமூக வலைதளம் காட்டிக் கொடுத்தது.
பெங்களூரு, மடிவாளாவை சேர்ந்தவர் முகமது பரூக், 38. கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு, 2015ல் அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கு விசாரணை, நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 2022 முதல் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
தலைமறைவான முகமது பரூக், தன் மொபைல் போனையும், இடத்தையும் மாற்றிக் கொண்டார். அவரின் தந்தை இறப்புக்கு கூட வராததால், அவரை பிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில், இவரின் மகன் இன்ஸ்டாகிராமில், முகமது பரூக் படம் வெளியாகி இருந்தது. இதை பார்த்த போலீசார், இன்ஸ்டாகிராம் ஐ.டி., மற்றும் ஐ.பி.,யை தெரிந்து கொண்டனர். சமூக வலைதளங்களில் கணக்கு துவங்க வேண்டும் என்றால், மொபைல் போன் எண் அவசியம்.
அதன்படி, அந்த ஐ.டி.,யின் மொபைல் போனை தெரிந்து கொண்ட போலீசார், மொபைல் போன் டவர் மூலம் எங்கு வசிக்கிறார் என்பதையும் கண்டறிந்தனர்.
அவர் இருக்கும் பகுதியின் சம்பந்தப்பட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்து, முகமது பரூக் நடவடிக்கையை கண்காணித்தனர். தொட்டகல்லசந்திராவில் இருந்த அவரை, நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் அவர் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதும் தெரிய வந்தது. அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் தயாராகி வருகின்றனர்.