ADDED : அக் 03, 2024 06:39 AM

பெங்களூரில் கெம்பேகவுடா கட்டிய கோட்டை இருப்பது, அனைவருக்கும் தெரியும். ஆனால் இதன் பின்னணியில், சுவாரஸ்யமான கதை இருப்பது, பலருக்கு தெரியாது. இந்த கோட்டை தியாகம், தேசப்பற்றின் அடையாளமாக விளங்குகிறது.
கற்கோட்டை
நாட்டுக்காக தங்களின் உடல், உயிர், பொருள் என அனைத்தையும் தியாகம் செய்தவர்கள் பலர் உண்டு. ஒவ்வொரு கோட்டையின் பின்னாலும், பெரிய கதை இருக்கும். இந்த கதை ஆச்சரியமானதாக இருக்கும். அதேபோன்று, பெங்களூரின் கோட்டையின் பின்னணியிலும் கூட, தியாகம், அர்ப்பணிப்பு மறைந்துள்ளது.
பெங்களூரின் கோட்டையை, 1537ல் விஜயநகர சாம்ராஜ்யத்தின் மன்னர் கெம்பேகவுடா கட்டினார்.
அவர் மண்ணில் கட்டியிருந்தார். அதன்பின் 1761ல் ஹைதர் அலி, கற்கோட்டையாக கட்டினார். அந்த காலத்தில் இது, பெரிய கோட்டையாக இருந்தது. அரண்மனை கோட்டை வளாகத்தில் சிக்பேட்டை, தொட்டபேட்டை என்ற இரண்டு பேட்டைகள் இருந்தன.
அதன் சுற்றுப்பகுதிகளில் பைரவேஸ்வரா கோவில், வெங்கட ரமணர் கோவில், ரங்கநாதர் கோவில், காளிகாம்பா, கோதண்ட சுவாமி கோவில்களை காணலாம்.
கோட்டைக்குள் தர்மராய சுவாமி கோவில், காளம்மா கோவில், ஆஞ்சநேயர், சவுடேஸ்வரி, வெங்கடேஸ்வர சுவாமி, கேசவநாத சுவாமி, பசவேஸ்வர் என பல கோவில்கள் உள்ளன.
பெங்களூரின் அற்புதமான இந்த கோட்டைக்கு ஒன்பது கதவுகள் உள்ளன. இங்கு பல பேட்டைகள் அமைக்கப்பட்டன.
அந்தந்த சமுதாயத்தினர் அடிப்படையில், கெம்பேகவுடா பேட்டைகளை பிரித்திருந்தார். அவரவர் சமுதாய கோவில்களும் அந்த பகுதியிலேயே இருந்தன.
கோட்டை தொடர்பாக, இதயத்தை உறைய வைக்கும் கதை ஒன்றுள்ளது.
கெம்பேகவுடா கோட்டை கட்டும் போது, தலைமை நுழைவாயில் நிற்கவில்லை. காலையில் கட்டினால், மாலையில் இடிந்து விழுந்துவிடும். இதற்கு என்ன காரணம் என, ஜோதிடர்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டது.
அவரும் நிறைமாத கர்ப்பிணியை பலி கொடுத்தால், கதவு நிற்கும் என கூறினாராம். ஆனால் கர்ப்பிணியை பலி கொடுக்க, கெம்பேகவுடா விரும்பவில்லை. எனவே மவுனமாக இருந்தார்.
நிறைமாத கர்ப்பிணி
இதையறிந்த அவரது மருமகள் லட்சுமிதேவி, மக்களின் நலனுக்காக உயிரை தியாகம் செய்ய முடிவு செய்தார். நிறைமாத கர்ப்பிணியான இவர், கதவு கட்டப்படும் இடத்தில் தன்னை தானே பலி கொடுத்து கொண்டார். இவரது தியாகத்தை மக்கள் இன்றைக்கும் நினைவு கூறுகின்றனர்.
பெங்களூருக்கு வரும் சுற்றுலா பயணியர், கோட்டையை ஆர்வத்துடன் பார்க்கின்றனர். உள்ளூர் மக்களும் கூட, விடுமுறை நாட்களில் இங்கு சென்று பொழுது போக்குகின்றனர். காலை 8:30 முதல் மாலை 5:30 மணி வரை கோட்டையை பார்வையிட அனுமதி அளிக்கப்படுகிறது. ஞாயிறு தவிர, மற்ற நாட்களில் கோட்டையை காண அனுமதி உண்டு.
கே.ஆர்.சாலையின், நியூ தரகுபேட்டில் கோட்டை அமைந்துள்ளது. பெங்களூரின் இதய பகுதியில் அமைந்துள்ளதால், ஏராளமான பஸ் வசதி உள்ளது. ஆட்டோ, டாக்சி போன்ற தனியார் வாகனங்கள் வசதியும் உள்ளது.
கோட்டையை பற்றிய கூடுதல் தகவல் வேண்டுவோர், 080 - 2235 2828 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். - நமது நிருபர் -

