அரசு வேலையில் பீஹார் பெண்களுக்கு 35 சதவீத இடஒதுக்கீடு அறிவிப்பு
அரசு வேலையில் பீஹார் பெண்களுக்கு 35 சதவீத இடஒதுக்கீடு அறிவிப்பு
ADDED : ஜூலை 09, 2025 02:39 AM

பாட்னா : பீஹாரில் நிரந்தர குடியுரிமை பெற்ற பெண்களுக்கு மாநில அரசு பணிகளில், 35 சதவீத இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
அனுமதி
பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டசபைக்கு சில மாதங்களில் தேர்தல் நடக்கவுள்ளது.
இந்நிலையில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் மாநில அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது.
இதில், பீஹார் இளைஞர் கமிஷன் அமைக்க அமைச்சரவை குழு அனுமதி அளித்தது.
மாநிலத்தில் உள்ள இளைஞர்களின் நலன் மற்றும் முன்னேற்றம் தொடர்பாக மாநில அரசுக்கு இந்த கமிஷன் ஆலோசனைகள் வழங்கும்.
இதுகுறித்து முதல்வர் நிதிஷ் குமார் வெளியிட்டு உள்ள அறிக்கை: பீஹார் இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தவும், பயிற்சி அளிக்கவும், அவர்களை அதிகாரம் பெற்றவர்களாகவும், திறமையானவர்களாகவும் மாற்றும் நோக்கத்தில் பீஹார் இளைஞர் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.
பரிந்துரை
மது, போதை பொருள் ஒழிப்புத் திட்டங்களை இந்த கமிஷன் வகுக்கும். இந்த விவகாரத்தில் அரசுக்கு பரிந்துரைகளையும் அளிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
இதற்கிடையே, சட்டசபை தேர்தலை மனதில் வைத்து பெண்களுக்கான இடஒதுக்கீடு விவகாரத்தில் நிதிஷ் குமார் அரசு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
பீஹாரில், அரசு வேலைகளில் பெண்களுக்கு 35 சதவீத இடஒதுக்கீடு, 2016 முதல் வழங்கப்பட்டு வருகிறது. பீஹாரில் வசிக்கும் வேற்று மாநில பெண்களும் இந்த இடஒதுக்கீட்டை அனுபவித்து வந்தனர்.
இனி, பீஹாரில் நிரந்தர குடியுரிமை பெற்ற பெண்கள் மட்டுமே, அரசுப் பணிகளில் 35 சதவீத இடஒதுக்கீட்டை பெற முடியும் என, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு அமைச்சரவை குழு கூட்டத்தில் நேற்று அனுமதி அளிக்கப்பட்டது.