ADDED : ஜூலை 12, 2011 07:10 PM
புதுடில்லி: 'மத்திய அமைச்சரவை மாற்றம், உப்புச் சப்பில்லாமல் நடந்து முடிந்துள்ளது' என, பா.ஜ., விமர்சித்துள்ளது.
மத்திய அமைச்சரவை மாற்றம் குறித்து, பா.ஜ., செய்தித் தொடர்பாளர் ராஜிவ் பிரதாப் ரூடி கூறியதாவது: மத்திய அமைச்சரவை மாற்றத்தில், பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், உப்புச் சப்பில்லாமல், நடந்து முடிந்துள்ளது. இந்த அமைச்சரவை மாற்றம், பயனற்ற நடவடிக்கை. இதன்மூலம், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மீது படிந்திருக்கும் இருளை நீக்கி விட முடியாது. நாட்டு மக்களுக்கு அளித்த உறுதிமொழியை, பிரதமர் மன்மோகன் சிங், மீண்டும் ஒருமுறை நிறைவேற்ற தவறி விட்டார். தற்போதைய அமைச்சரவை மாற்றத்தின் மூலம், ஏற்கனவே அமைச்சர்களாக இருந்த ஐந்து பேர் நீக்கப்பட்டுள்ளனர். 13 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால், எதிர்க்கட்சிகளால், குற்றச்சாட்டுக்கு உள்ளாகிய அமைச்சர்கள், பதவி நீக்கம் செய்யப்படவில்லை. அவர்கள், அமைச்சர்களாக தொடர்கின்றனர். இவ்வாறு ராஜிவ் பிரதாப் ரூடி கூறினார்.

