பா.ஜ., - எம்.எல்.ஏ., சர்க்கரை ஆலை வழக்கு விசாரணை நாளை ஒத்திவைப்பு
பா.ஜ., - எம்.எல்.ஏ., சர்க்கரை ஆலை வழக்கு விசாரணை நாளை ஒத்திவைப்பு
ADDED : பிப் 06, 2024 11:11 PM
பெங்களூரு : பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னாலின், சர்க்கரை ஆலை தொடர்பான விசாரணை, நாளை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
விஜயபுரா தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால். இவருக்கு சொந்தமான சர்க்கரை ஆலை கலபுரகியின் சிஞ்சோலியில் உள்ளது. இந்த ஆலையில் வெளியேற்றப்படும் கழிவுநீரால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக கூறி, சர்க்கரை ஆலையை மூட, கர்நாடகா மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி, கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் எத்னால் மனு செய்தார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி தினேஷ்குமார், நீதிபதி சிவசங்கர் கவுடா அமர்வு விசாரித்து வருகிறது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், அரசியல் காரணங்களுக்காக சர்க்கரை ஆலையை மூட, அரசு உத்தரவிட்டு இருப்பதாக கூறினார். இதற்கு அரசு தரப்பு வக்கீல் சசிகிரண் ஷெட்டி எதிர்ப்பு தெரிவித்தார். விதிகள்படி தொழிற்சாலை இயங்கவில்லை. இதனால் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அடுத்த விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தனர்.

