ADDED : டிச 31, 2025 04:57 AM
புதுடில்லி: சி.பி.எஸ்.இ.,யின் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில், மார்ச் 3ம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த தேர்வுகள் அனைத்தும், நிர்வாக காரணங்களால் மாற்று தேதிகளில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன.
சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வுகள் 2026ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி துவங்கும் என தெரிவித்திருந்தது. இந்நிலையில் வரும் மார்ச் 3ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த தேர்வுகள் அனைத்தும், நிர்வாக காரணங்களுக்காக மாற்று தேதிகளில் நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ., நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதன்படி, சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்புக்கு மார்ச் 3ம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த மண்டல மற்றும் சர்வதேச மொழிப்பாட தாள்கள், மார்ச் 11ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளன. இதேபோல் பிளஸ் 2 வகுப்பில் சட்டப் படிப்புக்கான தேர்வு, ஏப்ரல் 10ம் தேதிக்கும் மாற்றப்பட்டுள்ளது. மற்ற தேர்வுகள் அனைத்தும் திட்டமிட்டப்படி நடத்தப்படும் எனவும் சி.பி.எஸ்.இ., நிர்வாகம் அறிவித்துள்ளது.

