ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை கொண்டாடுகின்றனர்: பிரதமர்
ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை கொண்டாடுகின்றனர்: பிரதமர்
ADDED : ஜன 28, 2024 03:35 AM

மும்பை: ''முன்பெல்லாம் ஊழல் புகார் கூறப்பட்டாலே, பொது சேவையில் உள்ள அரசியல்வாதிகள் வெட்கி தலைகுனிந்தனர். ஆனால், தற்போது ஊழல் அரசியல்வாதிகள் பெரிய அளவில் கொண்டாடப்படும் அவல நிலை உள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி வேதனை தெரிவித்தார்.
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில், 84வது அனைத்திந்திய சட்டசபை சபாநாயகர்கள் மாநாடு நடக்கிறது. இதில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பங்கேற்ற பிரதமர் மோடி நேற்று கூறியதாவது:
சட்டசபை மற்றும் பார்லிமென்டின் கவுரவம், அதன் உறுப்பினர்கள் செயல்படும் விதத்திலேயே உள்ளது.
ஒரு உறுப்பினர் ஏதாவது விதியை மீறினால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால், கட்சியின் மூத்தவர்கள், அவருக்கு அறிவுரை வழங்குவர். இது போன்ற தவறு நடக்கக்கூடாது என கூறுவர்.
ஆனால், தற்போது ஒருவர் தவறு செய்தால், அதற்காக நடவடிக்கை எடுத்தால், அந்த உறுப்பினருக்கு ஆதரவாக கட்சிகள் செயல்படுகின்றன. இது, பார்லிமென்ட் மற்றும் சட்டசபைக்கு உகந்தது அல்ல.
அதுபோல, பொது வாழ்க்கையில் ஈடுபடும் ஒருவர் மீது, ஏதாவது ஊழல் புகார் கூறப்பட்டால், அவர் அவமானத்தால் பொது வாழ்க்கையில் இருந்து விலகி இருப்பார்.
ஆனால், தற்போது ஊழல் செய்பவர்களை புகழ்ந்து தள்ளுகின்றனர். இது நம்முடைய ஜனநாயகம், அரசியலமைப்பு சட்டம், நீதித் துறை மற்றும் நிர்வாக முறையை அவமதிப்பதாகும்.
சட்டம் இயற்றும் சபைகளில், பெண்களுக்கு அதிக பங்களிப்பு அளிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டமும் இயற்றப்பட்டுள்ளது.
கடந்த 2021 கூட்டத்தின்போது, ஒரே நாடு, ஒரே சட்டசபை தளம் என்பதை வலியுறுத்தினேன்.
தற்போது, 'இ - விதான், டிஜிட்டல் சன்சத்' ஆகியவற்றின் வாயிலாக, நாடு முழுதும் உள்ள சட்டசபைகள் மற்றும் பார்லிமென்டை இணைக்கும் தளங்கள் உருவாகியுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

