காங்., செய்தி தொடர்பாளர் மீது கிரிமினல் வழக்கு தொடர அனுமதி
காங்., செய்தி தொடர்பாளர் மீது கிரிமினல் வழக்கு தொடர அனுமதி
ADDED : மார் 02, 2024 04:21 AM

பெங்களூரு : மைசூரு பா.ஜ., - எம்.பி., பிரதாப் சிம்ஹா குறித்து அவதுாறாக பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் லட்சுமண் மீது கிரிமினல் வழக்குத் தொடர, பெங்களூரு முதன்மை மெட்ரோ பாலிடன் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
பெங்களூரு முதன்மை மெட்ரோ பாலிடன் நீதிமன்றத்தில், மைசூரு பா.ஜ., - எம்.பி., பிரதாப் சிம்ஹா தொடர்ந்த வழக்கில் கூறியிருப்பதாவது:
கடந்த 2014ல் நான் எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் முதல், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் லட்சுமண் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். குடகில் 60 கோடி ரூபாயில், பினாமி பெயரில் முதலீடு செய்துள்ளதாக, தினசரி நாளிதழில் செய்தி கொடுத்துள்ளார்.
அத்துடன், 'லோக்சபாவில் சிலர் வண்ணப்பொடி குண்டை வீசியதற்கு நான் தான் காரணம் என்றும்; என்னை ஏன் கைது செய்யவில்லை' என்றும் கூறிவருகிறார்.
இவரின் ஆதாரமற்ற குற்றச்சாட்டால் அரசியல் ரீதியாகவும், பொது ரீதியாகவும் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டு உள்ளது. எனவே அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் பிரதாப் சிம்ஹா கூறியிருந்தார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் லட்சுமண் மீது கிரிமினல் வழக்கு, மானநஷ்ட ஈடு வழக்கு தொடரவும் அனுமதி அளித்தது.
ஜூன் 12ம் தேதி விசாரணைக்கு லட்சுமண் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது.

