மணல் கடத்தலுக்கு ஒத்துழைப்பு இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!
மணல் கடத்தலுக்கு ஒத்துழைப்பு இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!
ADDED : ஜன 20, 2024 06:10 AM
மங்களூரு: மணல் மாபியாவுக்கு ஒத்துழைப்பு கொடுத்த இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
தட்சிண கன்னடா, மங்களூரு நகரின், கங்கனாடி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் மணல் கடத்தல் அதிகரித்தது. ஜெப்பின மொகரு என்ற இடத்தில் மணல் கடத்துவதாக, உயர் அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. அங்கு சென்று சோதனை நடத்தும்படி உத்தரவிட்டனர்.
ஆனால் கங்கனாடி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பஜந்திரி, உயர் அதிகாரிகளின் உத்தரவை பொருட்படுத்தவில்லை. மாறாக மணல் மாபியாவினருக்கு ஒத்துழைப்பு கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
அது மட்டுமின்றி, புகார்களுடன் போலீஸ் நிலையத்துக்கு வரும் பொதுமக்களிடம், சரியாக நடந்து கொள்வதில்லை என, கூறப்பட்டது. இந்த குற்றசாட்டுகள் குறித்து, விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி, மங்களூரு நகர போலீஸ் கமிஷனர் அனுபம் அகர்வால் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி ஏ.சி.பி., தன்யா நாயக், விசாரணை அறிக்கை தாக்கல் செய்தார். இதில் இன்ஸ்பெக்டர் பஜந்திரி, மணல் கடத்தலைத் தடுக்காமல், மேலதிகாரிகளின் உத்தரவை அலட்சியப்படுத்துகிறார். புகார் அளிக்க வரும் மக்களிடம், சரியாக நடப்பதில்லை என, விவரிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிக்கை அடிப்படையில், இன்ஸ்பெக்டர் பஜந்திரியை, பணியிடை நீக்கம் செய்து, நகர கமிஷனர் நேற்றுஉத்தரவிட்டார்.