நீதிபதிக்காக ரூ.15 லட்சம் லஞ்சம் வாங்கிய கோர்ட் குமாஸ்தா கைது
நீதிபதிக்காக ரூ.15 லட்சம் லஞ்சம் வாங்கிய கோர்ட் குமாஸ்தா கைது
ADDED : நவ 14, 2025 04:05 AM

மும்பை: மும்பை செஷன்ஸ் கோர்ட் நீதிபதிக்காக, 15 லட்சம் ரூபாயை லஞ்சமாக பெற்ற கோர்ட் குமாஸ்தாவை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
மஹாராஷ்டிராவின் மும்பையை சேர்ந்த தொழிலதிபரின் மனைவிக்கு சொந்தமான நிலம் பாந்த்ரா பகுதியில் உள்ளது.
இதை மற்றொரு நபர் ஆக்கிரமித்துள்ளதால் அதை மீட்டுத்தரக்கோரி தொழிலதிபரின் மனைவி மும்பை உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதை விசாரித்த உயர் நீதிமன்றம், 10 கோடி ரூபாய்க்கு குறைவான மதிப்புடைய நிலம் தொடர்பான வழக்கை மும்பை கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டுக்கு மாற்றி உத்தரவிட்டது.
இந்நிலையில், தொழிலபதிபர் மனைவிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்க வேண்டுமெனில், 25 லட்சம் ரூபாய் லஞ்சமாக தரவேண்டும் என, மும்பை கூடுதல் செஷன்ஸ் கோர்ட் நீதிபதி சலாலுதின் காஜி சார்பில் கோர்ட் குமாஸ்தா சந்திரகாந்த் வாசுதியோ, தொழிலதிபரை கேட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் பேரம் பேசி, 15 லட்சம் ரூபாயாக இந்த தொகை குறைக்கப்பட்டது. லஞ்சம் தர விரும்பாத தொழிலதிபர் இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
அவர்கள் தந்த ஆலோசனையின் படி ரசாயனம் தடவிய, 15 லட்சம் ரூபாயை குமாஸ்தா வாசுதியோவிடம் தொழிலபதிபர் நேற்று தந்தார்.
லஞ்ச பணத்தை பெற்றுக் கொண்டதாக நீதிபதி சலாலுதின் காஜியிடம் குமாஸ்தா தெரிவித்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், குமாஸ்தா வாசுதியோவை கைது செய்தனர்.
குமாஸ்தா வாசுதியோ மற்றும் நீதிபதி காஜி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நீதிபதியை தேடப்படும் குற்றவாளியாக லஞ்ச ஒழிப்புத்துறை அறிவித்துள்ளது.

