சபரிமலையில் அலைமோதும் கூட்டம்: நடை திறக்கும் நேரம் அதிகரிப்பு
சபரிமலையில் அலைமோதும் கூட்டம்: நடை திறக்கும் நேரம் அதிகரிப்பு
UPDATED : டிச 11, 2025 02:35 AM
ADDED : டிச 11, 2025 02:10 AM

சபரிமலை: சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் மீண்டும் அதிகரித்துள்ளதால் மதியம் மற்றும் இரவில், கோவில் நடை திறந்திருக்கும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை திறந்து, 25 நாட்களை கடந்துள்ளது. சில சனி, ஞாயிறு கிழமைகளை தவிர்த்து, மற்ற எல்லா நாட்களிலும் கூட்டம் மிக அதிகமாக உள்ளது.
மர கூட்டத்திலிருந்து நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டி உள்ளது. ஐந்து முதல் ஏழு மணி நேரம் வரை பக்தர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்.
நடை அடைக்கும் போது பக்தர்கள், 18ம் படி ஏற்றப்பட்டு வடக்கு வாசல் வழியாக வெளியே அனுப்பப்படுகின்றனர். இவர்கள் மீண்டும் சில மணி நேரம் வரிசையில் நின்று தான் சுவாமி தரிசனம் செய்ய வேண்டி உள்ளது.
இதனால் போலீஸ் மற்றும் தேவசம் போர்டு அதிகாரிகள் தந்திரியுடன் ஆலோசனை நடத்தி, மதியம் மற்றும் இரவு நேங்களில் கோவில் நடை அடைக்கும் நேரத்தை நீட்டித்துள்ளனர்.
இதன்படி மதியம், 1:00 மணிக்கு உச்ச பூஜை முடிந்து அடைக்கப்பட வேண்டிய நடை, 1:30 மணி வரையும், இரவில், 11:00 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைப்பதற்கு பதிலாக, 11:15 மணி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கோவிலின், 18 படிகளில் ஒரு நிமிடத்திற்கு, 80 பக்தர்கள் ஏற்றப்படுகின்றனர். தற்போது நீட்டிக்கப்பட்டுள்ள, 45 நிமிடங்களில் கூடுதலாக, 3,500 பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும்.
அரையாண்டு தேர்வுகள் முடிந்தபின் மேலும் கூட்டம் அதிகரிக்கும் என்பதால், போலீஸ் அதிகாரிகள் பல முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர்.

