ADDED : அக் 06, 2024 08:40 PM

பெங்களூரு:
ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள பழைய நோட்டுகளை, தீ வைத்து எரிக்க பெங்களூரு போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக நீதிமன்றத்திடம் அனுமதி கேட்டுள்ளனர்.
பெங்களூரு போலீசார், பல்வேறு வழக்குகளில் 5 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை, பறிமுதல் செய்திருந்தனர். இவைகள் பழைய 500 மற்றும் 1,000 ரூபாயாகும். இதற்கு முன் பழைய நோட்டுகளை மாற்றி கொள்ள, ரிசர்வ் வங்கி வாய்ப்பு அளித்திருந்தது. ஏற்கனவே கால அவகாசம் முடிந்துவிட்டது. பழைய நோட்டுகளை பெற முடியாது என, ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது.
பழைய நோட்டுகள் என்பதால், வங்கியில் டிபாசிட் செய்யவும் முடியவில்லை. இந்த நோட்டுகளுக்கு பைசா மதிப்பு இல்லை. இவை வெறும் காகிதம் மட்டுமே என, ரிசர்வ் வங்கி திட்டவட்டமாக கூறியுள்ளது. எனவே நோட்டுகளை எரித்து அழிக்க, போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இதற்காக நீதிமன்றத்திடம், அனுமதி கோரியுள்ளனர். அனுமதி கிடைத்ததும் நோட்டுகளை எரிப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.