ADDED : நவ 17, 2024 11:04 PM
பெங்களூரு:தனியார் நிறுவனங்களின் உதவியுடன், பெங்களூரின் ஏரிகளை மேம்படுத்த பெங்களூரு மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
பெங்களூரு மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை:
ஏரிகள் பாதுகாப்பு கொள்கை - 2024ல், ஏரிகளை எந்த வகையில் மேம்படுத்த வேண்டும் என்ற அம்சங்கள் உள்ளன. தனியார் நிறுவனங்களின் உதவியுடன், ஏரிகள் மேம்படுத்தப்படும்.
நகரின் அனைத்து ஏரிகளுக்கும் கண்காணிப்பு கேமரா பொருத்துவது, ஏரிகள் நீரை தரம் உயர்த்த அறிவியல் ரீதியான நடவடிக்கை எடுப்பது, நடை பயிற்சியாளர்களுக்கு தேவையான வசதிகள் செய்வது, வெள்ள பெருக்கு நிர்வகிப்பு என, பல்வேறு பணிகள் நடக்கும்.
புதிய கொள்கைகள், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நீதிமன்றம் ஒப்புதல் அளித்தால் மட்டுமே, இந்த கொள்கைகள் செயல்படுத்தப்படும்.
நடை பயிற்சியாளர்களுக்கு கழிப்பறை, அமர்ந்து ஓய்வெடுக்க இருக்கைகள், மழை நீர் பாய வசதி, கழிவு நீர் ஏரிகளில் கலக்காமல் நடவடிக்கை, குப்பை டப்பாக்கள் வைப்பது, பாதுகாப்பு வசதி, ஏரி வளாகத்தில் பூங்கா அமைப்பது உட்பட பல்வேறு பணிகள் நடத்தப்படும். இது குறித்து உயர் நீதிமன்றத்துக்கு விவரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.