ADDED : டிச 17, 2024 04:47 AM

மாரத்தஹள்ளி: மனைவி, மாமியார், மைத்துனர் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட பெங்களூரு இன்ஜினியரின் நான்கரை வயது மகன், உறவினர் வீட்டில் வசிப்பதாகடி.சி.பி., சிவகுமார் கூறி உள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தின் அதுல் சுபாஷ், 34. பெங்களூரு மாரத்தஹள்ளியில் தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றினார்.
கடந்த 9ம் தேதி வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி நிகிதா, மாமியார் நிஷா, மைத்துனர் அனுராக் கொடுத்த தொல்லையால், தற்கொலை செய்வதாக வீடியோவும் பேசி இருந்தார். இந்த வழக்கு நாடு முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் நிகிதா, நிஷா, அனுராக்கை மாரத்தஹள்ளி போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலும் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் அதுலின் நான்கரை வயது மகன் பற்றி, எந்த தகவலும் வெளியாகாமல் இருந்தது.
நேற்று முன்தினம் அதுலின் தந்தை பவன்குமார், உத்தர பிரதேசத்தில் பேட்டி அளிக்கையில், 'எனது பேரனை பற்றி தகவல் இல்லை. அவர் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்று கூட தெரியவில்லை.
அவர் உயிருடன் இருந்தால் எங்களிடம் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறி இருந்தார்.
இதுகுறித்து பெங்களூரு ஒயிட்பீல்டு டி.சி.பி., சிவகுமார் கூறுகையில், ''தற்கொலை செய்த அதுல் சுபாஷின் நான்கரை வயது மகன், உத்தர பிரதேசத்தில் உறவினர்கள் வீட்டில் பராமரிக்கப்பட்டு வருகிறார்.
''இது உணர்வுபூர்வமான தகவல் என்பதால் கூடுதல் விபரங்கள் எதுவும் தெரிவிக்க முடியாது. வரும் நாட்களில் குழந்தையை பற்றி தகவலை தெரிவிக்கிறோம். அதுல் தற்கொலை வழக்கை பாரபட்சமின்றி விசாரிக்கிறோம்,'' என்றார்.

