ADDED : பிப் 08, 2024 12:36 AM

ஹர்தா: மத்திய பிரதேசத்தில் ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்தில் படுகாயமடைந்த, 100க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாயமான இருவரை தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ம.பி.,யின் ஹர்தா நகரில் உள்ள பட்டாசு ஆலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீ விபத்தில், 11 பேர் உடல் கருகி பலியாகினர்; 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
அவர்களில், 73 பேர் அங்குள்ள மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், 51 பேர் அந்த ஆலையில் பணியாற்றிய தொழிலாளர்கள் எனவும், 22 பேர் அருகில் வசிப்பவர்கள் எனவும் போலீசாரால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதுதவிர, படுகாயம் அடைந்த 38 பேர், மேல் சிகிச்சைக்காக மற்ற நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்ட 95 பேர், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக மாவட்ட மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இந்த விபத்தில் இரண்டு பேர் மாயமானதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, விபத்து நிகழ்ந்த பட்டாசு ஆலையில் தொடர்ந்து அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், இதுதொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர்கள் இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவ்விவகாரம் குறித்து விசாரணை நடத்த கூடுதல் தலைமை செயலர் தலைமையில் மூன்று பேர் அடங்கிய குழுவை, மாநில அரசு நியமித்தது. விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரையும், படுகாயம் அடைந்தோரையும் முதல்வர் மோகன் யாதவ் நேற்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

