முதியவருக்கு பன்றிக்காய்ச்சல்; உச்சக்கட்ட அலர்ட்டில் உ.பி.!
முதியவருக்கு பன்றிக்காய்ச்சல்; உச்சக்கட்ட அலர்ட்டில் உ.பி.!
ADDED : செப் 13, 2024 05:05 PM

கான்பூர்; உ.பி.யில் முதியவர் ஒருவருக்கு பன்றிக்காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ளதால் தீவிர தடுப்பு நடவடிக்கைகளில் மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
சீதோஷ்ண நிலை மாறும் போது இயல்பாகவே சிறுசிறு உடல் உபாதைகள் ஏற்படுவது வாடிக்கை. ஆனால் எதையும் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது.கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காசர்கோடு வேளாண்மை கல்லூரி மாணவர்கள் 9 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசு முடுக்கிவிட்டது.
இந் நிலையில் உத்தரப்பிரதேசத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு ஒருவர் பாதிக்கப்பட்டு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் அண்மையில் பதிவான முதல் பன்றிக்காய்ச்சல் தொற்று ஆகும். 70 வயது முதியவர் ஒருவர் குருகிராம் பகுதியில் பன்றிக்காய்ச்சல் தொற்றுகளுடன் சிகிக்சை பெற்று வந்துள்ளார்.
பின்னர் அங்கிருந்து அவர் கான்பூரில் உள்ள லாலாலஜபதி ராய் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார். அவரை தனி அறையில் வைத்து சிகிக்சை அளித்து வரும் மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் வைத்திருக்கின்றனர்.
மாநிலத்தில் முதல் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு பதிவாகி இருப்பதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்றும் அறிவுறுத்தி இருக்கின்றனர்.
அனைத்து தரப்பினரும் பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள், அதன் தாக்கம் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். யாருக்கேனும் பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள் இருப்பது போன்று தென்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

