ADDED : நவ 07, 2025 01:23 AM
அசோக் விஹார்: மூன்று மாநிலங்களில் மிகப்பெரிய நெட்வொர்க் அமைத்து, செல்போன் கோபுரங்களின் பேட்டரிகளை திருடி, சட்ட விரோதமாக விற்று வந்த கும்பலின் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
செல்போன் கோபுரங்களின் பேட்டரிகள் மர்மமான முறையில் தொடர்ந்து மாயமாவதாக போலீசாருக்கு கடந்த மாதம் 4ம் தேதி புகார் வந்தது. அதுதொடர்பாக விசாரணை நடத்தியதில் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கம்லா மார்க்கெட் பகுதியில் கண்காணித்து வந்தனர்.
அங்கு செல்போன் கோபுர பேட்டரிகளை விற்க வந்த அகில், 48, லால்தர் சைனி, 40, ஆகிய இருவரை கையும் களவுமாக கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், ஷானு, 28, என்பவரையும் கைது செய்தனர்.
இவர்கள் டில்லி, நொய்டா, காசியாபாத் முழுவதும் ஒரு மிகப்பெரிய பரந்த வலையமைப்பை ஏற்படுத்தியிருந்தது விசாரணையில் தெரிய வந்தது. செல்போன் கோபுரங்களில் திருடப்பட்ட பேட்டரிகளை ஸ்கிராப் டீலர்கள் மற்றும் இ-ரிக்ஷா மெக்கானிக்குகளுக்கு விற்று வந்தனர்.
இந்த கும்பலிடம் இருந்து 17 பேட்டரிகள் மீட்கப்பட்டன. இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் பலரை போலீசார் தேடி வருகின்றனர்.

