ADDED : அக் 06, 2025 02:09 AM
புதுடில்லி:சமூக வலைதளம் வாயிலாக மிரட்டி, 39,000 ரூபாய் பறித்த ஹரியானா வாலிபரை டில்லி போலீசார் கைது செய்தனர்.
ஹரியானா மாநிலம் நுாஹ் மாவட்டம் முபாரக்பூரைச் சேர்ந்தவர் முஹமது நசீம், 26. சமூக வலைதளம் வாயிலாக டில்லியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு ஜூன் 5ம் தேதி பேசினார்.
அந்தப் பெண்ணுடைய அந்தரங்க வீடியோக்களை தன்னிடம் இருப்பதாகவும், அவற்றை சமூக வலைதளங்களில் வெளியிடாமல் இருக்க, பணம் அனுப்புமாறும் மிரட்டியுள்ளார்.
முகம் மறைக்கப்பட்ட சில வீடியோக்களையும் அனுப்பியுள்ளார். பயந்து போன அந்தப் பெண், யு.பி.ஐ., பணப்பரிவர்த்தனை வாயிலாக, 39,000 ரூபாய் அனுப்பியுள்ளார்.
அடுத்த சில நாட்களில் தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த அந்தப் பெண், தேசிய சைபர் ரிப்போர்டிங் பிளாட்பார்மில் புகார் பதிவு செய்தார்.
விசாரணை நடத்திய சைபர் கிரைம் போலீசார், முபாரக்பூர் வீட்டில் பதுங்கி இருந்த முஹமது நசீமை நேற்று கைது செய்தனர்.
நாடு முழுதும் பலரை இதுபோல ஏமாற்றியுள்ளார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. நசீமிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடக்கிறது.