பயங்கரவாதத்தை எதிர்க்க இந்தியாவும் ஸ்பெயினும் இணைந்து செயல்பட வேண்டும்: ஜனாதிபதி திரவுபதி முர்மு
பயங்கரவாதத்தை எதிர்க்க இந்தியாவும் ஸ்பெயினும் இணைந்து செயல்பட வேண்டும்: ஜனாதிபதி திரவுபதி முர்மு
ADDED : ஜன 21, 2026 06:41 PM

புதுடில்லி: பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் எதிர்த்துப் போராடுவதற்கு இந்தியாவும், ஸ்பெயினும் தங்களது வளங்களையும் திறன்களையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று ஜனாதிபதி முர்மு வலியுறுத்தினார்.
இந்த ஆண்டு இந்தியா மற்றும் ஸ்பெயின் இடையிலான தூதரக உறவுகளின் 70-வது ஆண்டைக் குறிக்கிறது. இந்நிலையில் இரு நாடுகளும் கலாசாரம்,. சுற்றுலா, ஏஐக்கான இரட்டை ஆண்டு என்று அறிவித்துள்ளன.
இதனை தொடர்ந்து இன்று(ஜனவரி 21) இந்தியா வந்துள்ள ஸ்பெயின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோஸ் மானுவல் அல்பாரேஸ் டில்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது ஜோஸ் மானுவல் அல்பாரேஸிடம் திரவுபதி முர்மு கூறியதாவது:
சர்வதேச அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் பயங்கரவாதத்தை ஒழிக்க இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
இந்தியா--ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இரு நாடுகளின் பொருளாதார உறவை மேலும் வலுப்படுத்தும். பொறியியல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பாதுகாப்பு போன்ற துறைகளில் ஸ்பெயினின் நிபுணத்துவம் இந்தியாவுக்கு உதவும்.
ஐநா சபை மற்றும் ஜி-20 (G-20) போன்ற சர்வதேச தளங்களில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது முக்கியத்துவத்தும் வாய்ந்தது.இவ்வாறு திரவுபதி முர்மு கூறினார்.

