ADDED : டிச 05, 2025 01:25 AM
கொழும்பு: 'டிட்வா' புயல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு, நம் நாடு தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகிறது.
நம் அண்டை நாடான இலங்கையில் கடந்த மாதம் முதல் கனமழை பெய்து வருகிறது. அத்துடன், 'டிட்வா' புயல் காரணமாகவும் இலங்கை பேரழிவை சந்தித்துள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால், 479 பேர் உயிரிழந்துள்ளனர்; 350 பேர் காணவில்லை.
நாடு முழுதும், 16 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெள்ள நீரில் சிக்கி தவிக்கின்றனர். இதையடுத்து, 'ஆப்பரேஷன் சாகர் பந்து' என்ற பெயரில், விமானம், கப்பல் வழியாக இந்தியா நிவாரண உதவிகளை அனுப்பி வருகிறது.
மருந்துகள், உணவு பொருட்கள் உள்ளிட்ட, 53 டன் அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஹெலிகாப்டர்கள், மீட்புக்கருவிகளுடன், தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
நேற்று முன்தினம் நடமாடும் மருத்துவமனை மற்றும், 73 மருத்துவப் பணியாளர்களை இந்தியா அனுப்பி வைத்தது. இந்நிலையில் நேற்று நவீன தற்காலிக பாலம், 500 நீர் சுத்திகரிப்பு கருவிகளும் இலங்கைக்கு அனுப்பப்பட்டன.
இந்திய துாதரகம் வெளியிட்ட அறிக்கையில், 'இலங்கை அரசின் கோரிக்கைக்கிணங்க இந்த உபகரணங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இந்த பெரிய நவீன தற்காலிக பாலம் சேதமடைந்த பாலங்களுக்கு பதிலாக சில மணி நேரங்களில் அமைக்கப்படும். இது வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் துண்டிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களையும், அவசர சேவை களையும் விரைவாக சேர்க்கவும் உதவும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம் விமானப்படை, சி-17 குளோப்மாஸ்டர் போக்குவரத்து விமானத்தில் பாலத்தை அமைக்க தேவையான 22 பொறியாளர்கள் உட்பட நிபுணர் கு ழுவையும் அனுப்பி உள்ளது.

