40 மாடி உயரத்தில் ராட்சத ராக்கெட் இஸ்ரோ தலைவர் பெருமிதம்
40 மாடி உயரத்தில் ராட்சத ராக்கெட் இஸ்ரோ தலைவர் பெருமிதம்
ADDED : ஆக 20, 2025 10:27 AM

ஹைதராபாத்: புவி வட்டப்பாதையில், 75,000 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளை நிலைநிறுத்த, 40 மாடி உயரத்தில் பிரமாண்ட ராக்கெட்டை உருவாக்கும் பணியில் இஸ்ரோ ஈடுபட்டு வருவதாக அதன் தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா தலைநகர் உஸ்மானியா பல்கலையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பங் கேற்ற அவர், புவி வட்டப் பாதையில் இந்தியாவின் 55 செயற்கைக்கோள்கள் சுற்றி வருகின்றன என்றும், இந்த எண்ணிக்கை அடுத்த நான்கு ஆண்டுகளில் மூன்று மடங்காக அதிகரிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
இது குறித்து மேலும் அவர் கூறியதாவது:
இஸ்ரோ அடுத்த தலைமுறைக்கான ராக்கெட்டை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளது. அந்த ராக்கெட்டின் திறன் எப்படி இருக்கும் தெரியுமா? முதல் முதலாக டாக்டர் அப்துல் கலாம் ராக்கெட்டை கட்டமைத்தபோது அதன் எடை 17 டன். அந்த ராக்கெட் மூலம் புவி வட்டப்பாதையில் 35 கிலோ எடை அளவுக்கான செயற்கைக்கோளை நிலைநிறுத்த முடிந்தது.
ஆனால், தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில் எல்லாமே கூடிவிட்டது. 75,000 கிலோ எடை கொண்ட பொருளை கூட சுமந்து சென்று புவி வட்டப் பாதையில் நிலை நிறுத்தும் அளவுக்கு வளர்ந்துவிட்டோம். இதற்காக, 40 மாடி உயரம் கொண்ட பிரமாண்ட ராக்கெட் உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்திய ராக்கெட்டுகள் மூலம், 6,500 கிலோ எடை கொண்ட அமெரிக்காவின் தொலைதொடர்பு செயற்கைக்கோளை விண்ணில் ஏவும் திட்டம், 'நேவிக்' எனப்படும் வழிகாட்டுதல் சேவைக்கான இந்திய செயற்கைக்கோள் அமைப்பு மற்றும் 'என்1' ராக்கெட் உள்ளிட்ட திட்டங்கள் இந்த ஆண்டு நிறைவேற்றப்படவுள்ளன.
வரும் 2035ம் ஆண்டுக்குள் 52 டன் எடை கொண்ட பிரமாண்ட விண்வெளி நிலையத்தை அமைக்கும் திட்டமும் இஸ்ரோவிடம் இருக்கிறது.
ஒற்றை ராக்கெட்டில் முதல் முயற்சியிலேயே, 104 செயற்கைக்கோளை விண்ணுக்கு ஏவிய முதல் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ தான். அதே போல் முதல் நாடும் இந்தியா தான். இதன் மூலம் நாம் வரலாறு படைத்திருக்கிறோம். சூரியனை பற்றி ஆய்வு மேற் கொள்ள இன்று நாம் 'எல்1' செயற்கைக்கோ ளையும் கட்டமைத்திருக் கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.