ADDED : டிச 12, 2024 02:47 AM

சண்டிகர் விளைபொருட்களுக்கு எம்.எஸ்.பி., எனப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பஞ்சாபைச் சேர்ந்த விவசாய சங்க தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால், 70, நடத்தி வரும் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நேற்று 16வது நாளை எட்டியது.
வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம்; விவசாய கடன் தள்ளுபடி; விவசாயிகளுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப்., 13 முதல், 'டில்லி சலோ' போராட்டத்தை, ஹரியானா - பஞ்சாப் எல்லைகளான ஷம்பு, கானவுரி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தால், டில்லியின் எல்லைகளில் கான்கிரீட் தடுப்புகள் அமைக்கப்பட்டு, பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஷம்பு எல்லையில் இருந்து டில்லிக்கு செல்ல முயன்ற விவசாயிகள் மீது, கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீசார் தடுத்து நிறுத்தினர்.
பஞ்சாபைச் சேர்ந்த விவசாய சங்க தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால், நவ., 26ல், கானவுரி எல்லையில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கினார். இந்த போராட்டம் நேற்று 16வது நாளை எட்டியது.
உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள ஜக்ஜித் சிங் தலேவால், 11 கிலோ எடை குறைந்துள்ளார். அவரது ரத்த சர்க்கரை அளவு ஏற்ற, இறக்கமாக உள்ளது. அவரது உடல்நிலையை டாக்டர்கள் குழு அருகிலிருந்து கண்காணித்து வருகிறது.
இதற்கிடையே, மத்திய அரசுடன் பேச்சு நடத்த வரும்படி, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் ரவ்னீத் சிங் நேற்று விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்தார்.