UPDATED : செப் 24, 2024 11:53 PM
ADDED : செப் 24, 2024 11:50 PM

பெங்களூரு: மூடா' முறைகேடு தொடர்பாக, தன் மீது விசாரணை நடத்த அனுமதி அளித்த கவர்னர் தாவர்சந்த் கெலாட் உத்தரவை எதிர்த்த கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனுவை, உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. இதனால், சித்தராமையாவுக்கு சிக்கல் உருவாகி, முதல்வர் பதவியில் அவர் நீடிப்பதும் கேள்விக்குறி ஆகி இருக்கிறது.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மைசூரு நகரில் இருந்து, 40 கி.மீ., துாரத்தில் உள்ள கெசரே என்ற கிராமத்தில், 3.16 ஏக்கர் நிலத்தை முதல்வரின் மனைவி பார்வதிக்கு, அவரின் சகோதரர் வழங்கினார்.
இந்த நிலத்தை கையகப்படுத்திய, 'மூடா' என்ற மைசூரு மேம்பாட்டு ஆணையம், அதற்கு மாற்றாக மைசூரு நகரின் மையப்பகுதியான விஜயநகரில், 14 மனைகளை பார்வதிக்கு ஒதுக்கியது.
பொதுவாக, வளர்ச்சியடைந்த பகுதிகளிலிருந்து கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு ஈடாக, வேறொரு வளர்ச்சியடைந்த இடத்தில், 40 சதவீத அளவுக்கு மட்டுமே நிலம் ஒதுக்க வேண்டும் என்பது, 'மூடா' அமைப்பின் விதி.
ஆனால், தனக்கு 50 சதவீதம் வழங்க வேண்டும் என்று, முதல்வர் சித்தராமையாவின் மனைவி நெருக்கடி கொடுத்து, 14 மனைகள் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
துஷ்பிரயோகம்
இதில், அதிகார துஷ்பிரயோகம் செய்து முறைகேட்டில் ஈடுபட்டதாக, முதல்வர் சித்தராமையா மீது பெங்களூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆபிரஹாம், மைசூரு லோக் ஆயுக்தா போலீசில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, முதல்வர் மீது விசாரணை நடத்த அனுமதி கோரி, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடமும் மனு அளித்தார்.
இந்த புகார் மனு அடிப்படையில் விளக்கம் கேட்டு, முதல்வருக்கு கவர்னர் நோட்டீஸ் அனுப்பினார். ஆனால், காலக்கெடுவுக்குள் முதல்வர் சித்தராமையா பதிலளிக்கவில்லை.
மாறாக, நோட்டீசை திரும்ப பெறும்படி, கவர்னருக்கு ஆலோசனை கூறும் வகையில் அமைச்சரவை கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கிடையில், மைசூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் ஸ்நேமயி கிருஷ்ணா, பிரதீப் குமார் ஆகியோரும், முதல்வர் மீது விசாரணை நடத்த கவர்னரிடம் அனுமதி கோரினர்.
இந்நிலையில், முதல்வர் தரப்பில் கவர்னரின் நோட்டீசுக்கு பதில் அளிக்கப்பட்டது. அரசு தரப்பிலும், மாநில தலைமை செயலர் ஷாலினி ரஜ்னீஷ், கவர்னரிடம் அறிக்கை சமர்ப்பித்தார்.
அனைத்தையும் பரிசீலனை செய்த கவர்னர், லஞ்ச ஒழிப்பு சட்டப்பிரிவு 17ஏ-ன் கீழ் முதல்வர் மீது விசாரணை நடத்த, ஆகஸ்ட் 17ம் தேதி அனுமதி அளித்தார்.
இதை ரத்து செய்ய கவர்னருக்கு உத்தரவிட கோரி, உயர் நீதிமன்றத்தில் முதல்வர் சித்தராமையா தரப்பில் ஆக., 19ம் தேதி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
197 பக்க தீர்ப்பு
இம்மனு மீது, ஆக., 19 முதல் இம்மாதம் 12ம் தேதி வரை, நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் விவாதம் நடந்தது.
முதல்வர் தரப்பில், உச்ச நீதிமன்ற மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி, ரவிவர்மா குமார், கவர்னர் தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மாநில அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் சசிகிரண் ஷெட்டி ஆகியோர் ஆஜராகி வாதாடினர். தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கில், நீதிபதி நாக பிரசன்னா நேற்று மதியம், 12:00 மணிக்கு தீர்ப்பு வழங்கினார். கவர்னர் உத்தரவை எதிர்த்து முதல்வர் தாக்கல் செய்திருந்த ரிட் மனுவை தள்ளுபடி செய்தார். தொடர்ந்து, 197 பக்கங்கள் கொண்ட தீர்ப்பையும் வெளியிட்டார்.
தீர்ப்பில் குறிப்பிட்டுஉள்ளதாவது:
* கவர்னர் அனுமதி சரி
* புகார்தாரர்கள் கவர்னரிடம் அனுமதி கோரியது சரி
* தற்போதைய சூழ்நிலையில், லஞ்ச ஒழிப்பு சட்டப்பிரிவு 17 ஏ-ன் கீழ், கவர்னர் அனுமதி அளித்தது சரியே
* சட்டப்பிரிவு 17 ஏ-ன் கீழ் தனிநபர்கள் விசாரணைக்கு அனுமதி கோருவதற்கு, போலீஸ் அதிகாரியை நாட வேண்டிய அவசியம் இல்லை
* சாதாரண சந்தர்ப்பங்களில், அமைச்சரவை கூட்டத்தின் பரிந்துரைகளை கவர்னர் ஏற்கலாம். சில நேரங்களில் சொந்தமாகவும் கவர்னர் முடிவு எடுக்க முடியும். அத்தகைய சூழ்நிலை தான் தற்போது ஏற்பட்டுள்ளது
* கவர்னரின் நடவடிக்கையில் எந்த தவறும் இல்லை. அவர், தனக்குள்ள உரிமை வாயிலாக சுதந்திரமான முடிவை பயன்படுத்தி உத்தரவு பிறப்பித்துள்ளார்
* எதற்காக உத்தரவிடப்படுகிறது என்பதை உத்தரவில் முழுமையாக குறிப்பிட வேண்டியதில்லை
* சட்டப்பிரிவு 17ஏ- ன் கீழ் விசாரணை நடத்த அனுமதி வழங்குவதற்கு முன், குற்றம் சாட்டப்பட்டவரிடம் விசாரிக்க வேண்டிய அவசியமில்லை
* கவர்னர் அவசரமாக முடிவு எடுத்துள்ளார் என்று கூற முடியாது; அவரது முடிவு சரியானதே
* மனைகள் ஒதுக்கிய போது, மனுதாரர் பதவியில் இல்லை என்றாலும், மறைமுகமாக அதிகாரத்தை பயன்படுத்தி இருக்கலாம்
* சட்டப்பிரிவு 17ஏ-ன் கீழ் மட்டுமே கவர்னர் அனுமதி அளித்துள்ளார்; கவர்னர் அனுமதி அளிக்க முடியாத வேறு பிரிவுகளில் அல்ல
* விசாரணையில் தெரியவந்ததன்படி, இந்த முறைகேடு குறித்து விசாரிக்க வேண்டியது அவசியம். ஏனென்றால், இந்த வழக்கில் மனுதாரரின் மனைவி பயனடைந்துள்ளார். வெளிநபர்கள் யாரும் இல்லை
* இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது
* மேலும், இதற்குமுன் பிறப்பித்த அனைத்து இடைக்கால உத்தரவுகளும் நீக்கப்படுகின்றன. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அதேநேரத்தில், மூடா முறைகேடு தொடர்பாக முதல்வர் மீது வழக்குப் பதிவு செய்ய, லோக் ஆயுக்தாவுக்கு உத்தரவிடக் கோரி, புகார்தாரர் ஸ்நேமயி கிருஷ்ணா, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கு, இன்று விசாரணைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீதிமன்றத்தின் தீர்ப்பு, மைசூரு பாதயாத்திரைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. மரியாதையுடன் முதல்வர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும். அவர் ராஜினாமா செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.விஜயேந்திரா கர்நாடக மாநில பா.ஜ., தலைவர்
மூடா முறைகேட்டில் நடந்த விஷயங்கள் குறித்து, மைசூரு பாதயாத்திரையின் போது மக்களுக்கு விளக்கப்பட்டது. எனக்கும், அந்த வழக்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை. அவரை ராஜினாமா செய்யும்படி நான் வலியுறுத்தவில்லை.- குமாரசாமி,மத்திய அமைச்சர், கனரக தொழில்கள் துறை