மத்திய அரசு சாலை கட்டமைப்பால் சுற்றுலா பயணியரை கவரும் கேரளா
மத்திய அரசு சாலை கட்டமைப்பால் சுற்றுலா பயணியரை கவரும் கேரளா
ADDED : ஜன 01, 2026 03:00 PM

மூணாறு: இயற்கையான சுற்றுச்சூழலுடன் காணப்படும் கேரள மாநிலம் ' கடவுளின் சொந்த நாடு' என பெருமையுடன் அழைக்கப்படுகிறது.
அதற்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் பாதுகாப்பு மற்றும் ரம்யமான சுற்றுச் சூழல் ஆகியவற்றுடன் உலகளாவிய சுற்றுலா ' ஹாட்ஸ் பாட்'டாக மாநிலம் மாறி வருகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் சுற்றுலா பயணிகள் வருகை அமைந்துள்ளது. கொரோனா காலத்திற்கு பிறகு பயணிகள் வருகையில் பெரும் முன்னேற்றம் எற்பட்டுள்ளது.
கடந்தாண்டு ஜன. 1 முதல் செப்.30 வரையிலான ஒன்பது மாதங்களில் உள்நாட்டைச் சேர்ந்த 1,80,29,553, வெளிநாடுகளை சேர்ந்த 5,67,117 என மொத்தம் 1,85,96,670 பயணிகள் வருகை தந்து சாதனையை ஏற்படுத்தியது. இதே கால அளவில் 2024யை விட 13.06 இது சதவீதம் அதிகமாகும்.
உலக அளவில் சுற்றுலாவை சந்தைப்படுத்தி, பல்வேறு சுற்றுலா கட்டமைப்பு திட்டங்கள் செயல்படுத்தியதால் பயணிகள் வருகை அதிகரித்தது.
ரோடுகளின் கட்டமைப்புகள் சுற்றுலா வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. அதற்கு எடுத்துக்காட்டாக கொச்சி- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு, போடிமெட்டு உள்ளது. மத்திய அரசின் ரூ.378 கோடி நிதியில் இருவழி சாலையாக அமைக்கப்பட்ட ரோடு, பசுமையான தேயிலை தோட்டங்களுக்கு இடையே கடந்து செல்லும் ரம்யமான அழகை ரசிப்பதற்கு என பயணிகள் வந்து செல்கின்றனர்.

