ஆசிரம தலைவரின் சீடர் எனக்கூறி பெண்ணை சீரழித்தவர் பிடிபட்டார்
ஆசிரம தலைவரின் சீடர் எனக்கூறி பெண்ணை சீரழித்தவர் பிடிபட்டார்
ADDED : அக் 13, 2025 01:39 AM
மதுரா:பிருந்தாவனத்தில் பிரேமானந்த் மஹராஜை சந்திக்க அழைத்துச் செல்வதாக கூறி, பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது செய்யப்பட்டார்.
உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா நகரின் ராதா நிவாஸில் வசிப்பவர் சுந்தரம். இவருக்கு, ஆக்ராவைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் சமூக ஊடகம் வாயிலாக நட்பு ஏற்பட்டது.
மதுரா பிருந்தாவனம் மடத்து தலைவர் பிரேமானந்த் மஹராஜின் சீடர் என அந்தப் பெண்ணிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். இருவரும் சமூக ஊடகம் வாயிலாகவே குறுஞ்செய்தி அனுப்பி தங்கள் நட்பை வளர்த்தனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி, பிரேமானந்த் மஹராஜை பிரத்யேகமாக சந்தித்து ஆசி பெற ஏற்பாடு செய்வதாக அந்தப் பெண்ணுக்கு, சுந்தரம் குறுஞ்செய்தி அனுப்பினார். செப்.12ல் அந்தப் பெண் தன் சகோதரருடன் பிருந்தாவனத்துக்கு வந்தார்.
இதற்கு மேல் காரில் செல்ல முடியாது எனக்கூறிய சுந்தரம், அந்தப் பெண்ணின் சகோதரரை வாகன நிறுத்துமிடத்திலேயே காத்திருக்கச் சொல்லி விட்டு, அந்தப் பெண்ணை மட்டும் தன் பைக்கில் அழைத்துச் சென்றார்.
ஆனால், ஆசிரமத்துக்கு செல்வதற்குப் பதிலாக ராதாகிருஷ்ணா தாம் என்ற ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார். அங்குள்ள அறையில் இருவரும் காபி குடித்தனர்.
அதற்குப் பின் அந்தப் பெண் மயங்கி விட்டார். மயங்கிக் கிடந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சுந்தரம், அதை 'வீடியோ'வும் எடுத்துள்ளார். மயக்கம் தெளிந்த பெண்ணிடம் வீடியோ மற்றும் போட்டோக்களை காட்டி மிரட்டி ஊருக்கு அனுப்பி விட்டார்.
அதற்குப் பின், வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி அந்தப் பெண்ணை பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்நிலையில், அந்தப் பெண் கோட்வாலி போலீசில் சமீபத்தில் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார் மதுரா தியோராஹா பாபா காட் சாலையில் சுந்தரத்தை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்குப் பின், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சுந்தரம், சிறையில் அடைக்கப்பட்டார். அவருடைய மொபைல் போன் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.