ராகுல் குறித்து சோனியாவிடம் புகார் அளித்த முன்னாள் எம்எல்ஏ காங்கிரஸில் இருந்து நீக்கம்
ராகுல் குறித்து சோனியாவிடம் புகார் அளித்த முன்னாள் எம்எல்ஏ காங்கிரஸில் இருந்து நீக்கம்
ADDED : டிச 15, 2025 01:13 PM

புவனேஸ்வர்: ராகுல் குறித்து சோனியாவிடம் கடிதம் மூலம் புகார் அளித்த ஒடிசாவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏவை கட்சியில் இருந்து நீக்கம் செய்து காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது.
ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் வலிமை இழந்து வருவதாக அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் தேசிய தலைவருமான சோனியாவுக்கு, ஒடிசாவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏவும், காங்கிரஸ் நிர்வாகியுமான முகமது மொகிம் என்பவர் கடிதம் எழுதியிருந்தார். மேலும், 5 பக்கம் கொண்ட கடிதத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல் ஆகியோர் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தார்.
கட்சியின் தலைமைக்கும், அடிமட்ட தொண்டர்களுக்கும் இடையே மிகப்பெரிய இடைவேளை இருப்பதாகவும், 83 வயதான கார்கேவால், இளைய சமுதாயத்தினருடன் இணைந்து செயல்பட முடியவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். இதன் காரணமாகவே, ஜோதிராதித்ய சிந்தியா, ஹிமாந்த பிஸ்வா சர்மா போன்ற இளம் தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறி விட்டதாகவும், தொடர்ச்சியான தவறான முடிவுகள், மோசமான தலைமையும், பொறுப்பான பதவிகளை தகுதியற்றவர்களுக்கு வழங்கியதுதான் காங்கிரஸ் கட்சியின் தொடர் தோல்விக்கு காரணம் என்று வெளிப்படையாக குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து முகமது மொகிம் நீக்கப்படுவதாக அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

