பூட்டிய வீடுகளை குறிவைத்து திருடி வந்த ம.பி., கும்பல்
பூட்டிய வீடுகளை குறிவைத்து திருடி வந்த ம.பி., கும்பல்
ADDED : மே 02, 2025 01:32 AM
விஜய் விஹார்: தேசிய தலைநகரில் பூட்டிய வீடுகளை குறிவைத்து திருடி வந்த மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பூட்டு சரிசெய்யும் தொழிலாளிகள் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
விஜய் விஹார் பகுதியில் பூட்டிய வீட்டில் தங்க நகைகள், பணம் ஆகியவை திருடு போனதாக கடந்த மாதம் 20ம் தேதி போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை துவக்கினர். கிடைத்த சில தடயங்கள், அவர்களை மத்திய பிரதேசத்தின் மஹிபால்பூரின் ஒவ்வொரு ஹோட்டாலாக ஏறச் செய்தது.
ஏறக்குறைய 50க்கும் மேற்பட்ட ஹோட்டல்களில் விசாரணை நடத்திய போலீசார், ஏப்ரல் 28ம் தேதி சந்தேகத்திற்கு இடமான மூன்று பேரை பிடித்தனர்.
மூவரும் ஒரு ஹோட்டலில் வேலை செய்து வந்தனர். மூன்று பேருமே தொழில் முறையில் பூட்டு கோளாறை சரிசெய்யும் திறமை பெற்றவர்கள்.
அதனால் பூட்டிய வீட்டை நோட்டமிட்டு, சரியான நேரம் பார்த்து திருடுவதை வழக்கமாக மாற்றியுள்ளனர். சுர்ஜித் சிங், 41, அனில் சிங், 32 கீர்த்தன் சிங், 24, ஆகிய மூன்று பேரையும் கைது செய்த போலீசார், ஏராளமான தங்க நகைகள், ஒன்பது இரு சக்கர வாகனங்கள் உட்பட பல லட்சம் மதிப்புள்ள பொருட்களை மீட்டனர்.
இவர்கள் மூன்று பேரும் மத்திய பிரதேசத்தின் இந்துாரை சேர்ந்தவர்கள். குறுக்குவழியில் ஆடம்பரமாக வாழ, திருட்டுத் தொழிலை தேர்ந்தெடுத்துள்ளனர். பல்வேறு வழக்குகளில் இவர்களுக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

