ஹனகல் பெண் கூட்டு பலாத்கார சம்பவம் தேசிய மகளிர் ஆணையம் வழக்கு பதிவு
ஹனகல் பெண் கூட்டு பலாத்கார சம்பவம் தேசிய மகளிர் ஆணையம் வழக்கு பதிவு
ADDED : ஜன 14, 2024 11:39 PM
ஹாவேரி: ஹனகல் முஸ்லிம் பெண் கூட்டு பலாத்காரம் தொடர்பாக, தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து உள்ளது.
ஹாவேரி ஹனகல் போர்கரா கிராசில் உள்ள லாட்ஜில் ஒரு அறையில், கடந்த 8ம் தேதி 30 வயது முஸ்லிம் பெண், வேறு மதத்தை சேர்ந்த ஆண் நண்பருடன் தங்கி இருந்தார். இதுபற்றி அறிந்த பெண்ணின் சமூகத்தை சேர்ந்த, வாலிபர்கள் ஏழு பேர் அறைக்குள் அத்துமீறி புகுந்து, பெண்ணையும், அவரது நண்பரையும் தாக்கினர்.
அதன்பின்னர், பெண்ணை காரில் கடத்தி சென்று, கூட்டு பலாத்காரம் செய்து உள்ளனர். இதுகுறித்து ஹனகல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இதுவரை பாதிக்கப்பட்ட பெண்ணை சந்தித்து, அரசு சார்பில் யாரும் ஆறுதல் கூறவில்லை. இந்த சம்பவம் பற்றி ஆட்சியாளர்கள், வாய் திறக்கவே மறுக்கின்றனர்.
மூடி மறைக்க முயற்சி
ஆனால், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, பா.ஜ., ஆதரவு கரம் நீட்டி உள்ளது. உத்தர கன்னடா ஷிர்சியில் உள்ள தாய் வீட்டில், பாதிக்கப்பட்ட பெண் வசிக்கிறார். நேற்று அங்கு சென்ற பா.ஜ., மகளிர் அணியினர், அந்த பெண்ணுக்கு ஆறுதல் கூறினர்.
இந்நிலையில், இந்த வழக்கை மூடிமறைக்க, அரசு முயற்சி செய்வதாக, பா.ஜ.,வினர் குற்றம்சாட்டி உள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பணம் கொடுத்து, ஏழு வாலிபர்களை தப்பிக்க வைக்க, போலீசார் மூலம் முயற்சி நடப்பதாக, பா.ஜ., முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, முன்னாள் அமைச்சர்கள் குற்றச்சாட்டி வருகின்றனர். இந்த வழக்கை எஸ்.ஐ.டி., விசாரணைக்கு ஒப்படைக்கவும், பா.ஜ., கோரிக்கை வைத்து உள்ளது.
கற்று தரவில்லை
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக, தேசிய மகளிர் ஆணையம் நேற்று தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. அந்த ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா கூறுகையில், ''ஹனகல் முஸ்லிம் பெண்ணுக்கு நடந்தது, மனிதாபிமானமற்ற சம்பவம். இதற்கு முழு சமூகமும் பொறுப்பு ஏற்க வேண்டும்.
''பெண்கள் அச்சத்தில் உள்ளனர். பெண்களை எப்படி நடத்த வேண்டும் என்று, ஆண்களுக்கு சமூகம் கற்றுத்தரவில்லை. இது கவலை அளிக்கிறது. ஹனகல் சம்பவம் குறித்த விசாரணை அறிக்கையை, கர்நாடகா போலீஸ் டி.ஜி.பி., அலோக் மோகனிடம் கேட்டு உள்ளோம். மூன்று நாட்களில் அறிக்கை வராவிட்டால், மகளிர் ஆணையம் ஹனகல் சென்று விசாரணை நடத்தும்,'' என்றார்.
இதற்கிடையில் கைதான ஆறு வாலிபர்களை, பாதிக்கப்பட்ட பெண் முன்பு நிற்க வைத்து, போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். அதில் இரண்டு பேருக்கு, இந்த வழக்கில் தொடர்பு இல்லை. அவர்களை பார்த்ததே இல்லை என்று, அப்பெண் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.