செய்யாத தவறுக்கு சிறை சென்றவருக்கு ரூ.14 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
செய்யாத தவறுக்கு சிறை சென்றவருக்கு ரூ.14 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
ADDED : ஜன 10, 2026 12:50 AM

திருவனந்தபுரம்: மகளின் திருமணத்திற்காக வெளிநாட்டில் இருந்து வந்த தந்தையை, செயின் திருட்டு வழக்கில் கைது செய்து, 54 நாட்கள் சிறையில் அடைத்த சம்பவத்தில், 14 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி மாநில அரசுக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலம் கண்ணுார் தலசே ரி பகுதியைச் சேர்ந்தவர் தாஜூதீன். இவர், மேற்காசிய நாடான கத்தாரில் வேலை பார்த்து வந்தார். கடந்த, 2018 ஜூன் 25ல் மகளின் திருமணத்துக்காக விடுமுறையில் ஊருக்கு வந்தார்.
ஜூலை 15-ம் தேதி இவரை கண்ணுார் சக்கரக்கல் போலீசார் கைது, செய்து அழைத்து சென்றனர். பைக்கில் வந்து செயின் திருட்டில் ஈடுபட்ட ஒரு சம்பவத்தில் எடுக்கப்பட்ட 'சிசிடிவி' காட்சியில், தாஜூதீன் உள்ளதாக போலீசார் கூறினர். இதைத்தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் நடந்த விசாரணையில், செயின் திருட்டில் ஈடுபட்டது அதே பகுதியைச் சேர்ந்த சரத் வல்சராஜ் என்று தெரியவந்தது.
இதனிடையே தாஜூதீனின் கத்தார் வேலையும் பறிபோனது. இது தொடர்பாக தாஜூதீன் தொடர்ந்த வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்ற நீதிபதி பி.எம்., மனோஜ், 'பொது சட்ட நிவாரணத்தின் படி தாஜூதீனுக்கு 14 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்' என, உத்தரவிட்டார்.
இந்த தொகையை அவரை சிறையில் அடைத்த கண்ணுார் சக்கரக்கல் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., பிஜூ, உதவி எஸ்.ஐ.,க்கள் யோகேஷ், உன்னிகிருஷ்ணன் ஆகியோரிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என்றும் உத்தர விட்டுள்ளார்.

