ADDED : பிப் 22, 2026 12:35 AM

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வறுமை வி கிதம் கடந்த ஆறு ஆண்டு களில், 6.90 சதவீதம் அதிகரித்துள்ளதாக, அந்நாட்டு அரசின் உயர்மட்டக்குழு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில், வறுமை மதிப்பீடுகளை ஆய்வு செய்த பாகிஸ்தான் பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தின் ஆய்வறிக்கையில், கடந்த 2018 - 19ம் நிதியாண்டில் 21.90 சதவீதமாக இருந்த பாகிஸ்தானின் வறுமை விகிதம், கடந்த 2024 - 25ம் நிதியாண்டில் 28.80 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது, கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் வறுமை விகிதம் 6.90 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த ஆய்வறிக்கை தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்றாலும், அந்நாட்டின் ஆங்கில நாளிதழ் செய்தியாக வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் கடந்த ஆறு ஆண்டுகளில், மூன்று முறை ஐ.எம்.எப்., எனும் சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார சீர்திருத்த திட்டங்களுக்கு உட்படுத்தப்பட்டது.
இதனால், வரி அதிகரிப்பு மற்றும் மானியம் குறைப்பு போன்றவை சாமானிய மக்களை பெருமளவு பாதித்தது. இதேபோன்று, கொரோனா பெருந்தொற்றால் நடுத்தர, ஏழை மக்கள் வாழ்வாதாரம் பெருமளவு சிதைந்தது.
கடந்த, 2022 மற்றும் 2 025ல் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கால் , கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பயிர்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் அழிந்தன.
அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, விவசாயிகளுக்கான கோதுமை ஆதரவு விலையை அரசு திரும்ப பெற்றது உள்ளிட்ட காரணங்கள், வறுமை அதிகரிக்க முக்கிய காரணம் என தெரிய வந்துள்ளது.
பாகிஸ்தானின் அனைத்து மாகாணங்களிலும் வறுமை அதிகரித்திருந்தாலும், பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்களில் வறுமையின் தாக்கம் பிற மாகாணங்களை விட அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2005 - 06ல், 50.40 சதவீதமாக இருந்த வறுமை விகிதம், 2018 - 19ல், 21.90 சதவீதமாக குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் 28.80 சதவீதமாக உயர்ந்துள்ளது அந்நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை காட்டுகிறது.
சமீபத்திய உலக வங்கியின் அறிக்கையிலும், பாகிஸ்தான் மக்கள் தொகையில் 44.70 சதவீதம் பேர் வறுமையில் வாடுவதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது தெற்காசியாவின் மற்ற நாடுகளை விட மிக அதிகம் என் பது குறிப்பிடத்தக்கது.

