நீட் பயிற்சியை நீட்டிக்க பெற்றோர் மறுப்பு: விரக்தியில் டில்லி மாணவர் தற்கொலை
நீட் பயிற்சியை நீட்டிக்க பெற்றோர் மறுப்பு: விரக்தியில் டில்லி மாணவர் தற்கொலை
ADDED : ஏப் 27, 2025 12:46 AM

கோட்டா: நீட் தேர்வு பயிற்சியை மேலும் ஓராண்டு தொடர பெற்றோர் மறுப்பு தெரிவித்ததால், விரக்தியில் டில்லியைச் சேர்ந்த மாணவர், ராஜஸ்தானின் கோட்டாவில் தற்கொலை செய்தார்.
டில்லியைச் சேர்ந்தவர் ரஞ்சித் சர்மா. தச்சுத் தொழிலாளியான இவருக்கு ரோஷன் சர்மா, 23, என்ற மகனும், மகளும் உள்ளனர்.
இதில், ரோஷன் சர்மா, டாக்டராக வேண்டும் என்ற கனவுடன் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள தனியார் பயிற்சி நிறுவனத்தில், நீட் தேர்வுக்காக இணைந்து கடந்த மூன்று ஆண்டுகளாக அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார்.
இந்நிலையில், ரஞ்சித் சர்மா, தன் மனைவியுடன் ராஜஸ்தானின் கோட்டாவிற்கு தங்கள் மகனை காண கடந்த 22ம் தேதி சென்றார். ரோஷன் சர்மா விடுதியில் இல்லாததால், மொபைல் போனில் அவரது பெற்றோர் பேசினர்.
தேர்வுக்கு தயார்
அப்போது ரோஷன் சர்மா, 'வரும் 4ம் தேதி நடைபெறும் நீட் தேர்வில் நான் பங்கேற்க போவதில்லை. தேர்வுக்கு நன்கு தயாராக, மேலும் ஓராண்டு பயிற்சி மேற்கொள்ள முடிவு செய்துள்ளேன்' என, குறிப்பிட்டுள்ளார்.
இதை கேட்டு அதிருப்தி அடைந்த அவரது பெற்றோர், இந்த ஆண்டு தேர்வு எழுதும்படியும், இல்லை எனில் பயிற்சியை அத்துடன் நிறைவுசெய்து வீட்டிற்கே வரும்படியும் மகனிடம் அறிவுறுத்தினர்.
ஆனால், நீட் பயிற்சியை நிறைவு செய்யாமல் வீட்டிற்கு வர மாட்டேன் என, ரோஷன் சர்மா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, விடுதி அறையில் இருந்த ரோஷன் சர்மாவின் உடைமைகளை அவரது பெற்றோர் டில்லிக்கு எடுத்துச் சென்றனர்.
தங்கள் மகன், விரைவில் வீடு திரும்புவார் என எதிர்பார்த்த நிலையில், ரோஷன் சர்மா, ராஜஸ்தா னின் கோட்டாவில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ததாக கிடைத்த தகவலைக் கேட்டு ரஞ்சித் சர்மா அதிர்ச்சி அடைந்தனர்.
விசாரணை
ரோஷன் சர்மாவின் உடலை பிரேத பரிசோதனை செய்த பின், அவரது பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார், சந்தேக மரணம் என குறிப்பிட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

