விரைவில் புது அலுவலகத்தில் பணியை துவக்குகிறார் பிரதமர் மோடி
விரைவில் புது அலுவலகத்தில் பணியை துவக்குகிறார் பிரதமர் மோடி
ADDED : ஜன 12, 2026 03:58 PM

புதுடில்லி: டில்லியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பிரதமர் அலுவலகப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. இந்த அலுவலகத்தில் இருந்து பிரதமர் தமது அதிகாரப்பூர்வ அலுவல்களை விரைவில் துவங்குவார் என தகவல் வெளியாகி உள்ளது.
டில்லியில் உள்ள பார்லிமென்ட் கட்டடம், துணை ஜனாதிபதி இல்லம், மத்திய அரசு அலுவலகங்கள், ஜனாதிபதி மாளிகையில் இருந்து இந்தியா கேட் வரையிலான கடமைப் பாதை ஆகியவை முற்றிலுமாக மறுசீரமைக்கப்பட்டு வருகிறது. 'சென்ட்ரல் விஸ்டா' என பெயரிடப்பட்ட இத்திட்டத்துக்கு 20,000 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்கியது.
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை சார்பில் புதிய பார்லிமென்ட் கட்டப்பட்டு, கூட்டத்தொடர்களும் நடந்து வருகின்றன. துணை ஜனாதிபதி இல்லம் கட்டப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், பிரதமர் அலுவலகத்துக்கும் புது கட்டடம் கட்டப்பட்டு வந்தது. அதற்கு சேவா தீர்த் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த அலுவலகமானது 3 கட்டடங்களை கொண்டுள்ளது. சேவா தீர்த் 1 ல் பிரதமர் அலுவலகம் செயல்படும். சேவா தீர்த் 2 ல் மத்திய அமைச்சரவை அலுவலகமும், சேவா தீர்த் 3 ல் தேசிய பாதுகாப்பு கவுன்சில் அலுவலகம் செயல்படும். இத்துடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் அலுவலகமும் அமைந்து இருக்கும்.
இந்த அலுவலகத்தில் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இது விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து விரைவில் இந்த அலுவலகத்தில் இருந்து பிரதமர் மோடி பணியை துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அநேகமாக, வரும் மகர சங்கராந்தி தினம் முதல் இந்த அலுவலகத்தில் பிரதமர் மோடி பணியை துவக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, தெற்கு பிளாக் பகுதியில் பிரதமர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் இல்லம்
இதனிடையே, தற்போது லோக் கல்யாண் மார்க் பகுதியில் பிரதமர் இல்லம் உள்ளது. புதிதாக இல்லம் கட்டும் பணியும் நடந்து வருகிறது. இந்தப் பணியும் நிறைவடையும் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

