ADDED : நவ 28, 2024 11:51 PM

பாலக்காடு ; பாலக்காடு அருகே, குடியிருப்பு பகுதியில் பிளாஸ்டிக் கழிவு கொட்டிய வழக்கில் போலீசார் பறிமுதல் செய்த வேனுக்கு, அடிதடி வழக்கில் ஜாமினில் வெளியே வந்தவர் தீ வைத்தார்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், சுள்ளிமடை பகுதியை சேர்ந்தவர் பவுல்ராஜ், 50. இவர், குடிபோதையில் அடிதடியில் ஈடுபட்ட வழக்கில், வாளையார் போலீசார் நேற்று முன்தினம் மாலை கஸ்டடியில் எடுத்து விசாரித்த பின், ஸ்டேஷன் ஜாமினில் விடுவித்தனர்.இதனால், ஆத்திரமடைந்து அவர், இரவு, 8:30 மணிக்கு, போலீஸ் ஸ்டேஷன் அருகே நிறுத்தி வைத்திருந்த, குடியிருப்பு பகுதியில் பிளாஸ்டிக் கழிவு கொட்டிய வழக்கில் பறிமுதல் செய்த வேன் மீது, பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இதில், வேன் கொளுந்து விட்டு எரிந்தது.
வாகனம் எரிந்து கரும்புகை கிளம்பியதை கண்டு ஓடி வந்த போலீசார், அங்கிருந்த தப்ப முயன்ற பவுல்ராஜை மடக்கிப் பிடித்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர், வேனில் பற்றி எரிந்த தீயை அணைத்ததால், மற்ற வாகனங்களுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. பறிமுதல் வாகனத்தை எரிந்தது, போலீஸ் அதிகாரிகளின் பணிக்கு இடையூறு விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில், பவுல்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளதாக, இன்ஸ்பெக்டர் ராஜிவ் தெரிவித்தார்.