ADDED : ஜன 23, 2025 05:04 AM
தங்கவயல்: தனியார் பள்ளி சுவர் மீது நிறுவப்பட்ட மின் விளக்குகளுக்கான மின்சாரத்தை பெஸ்காம் அதிகாரிகள் துண்டித்தனர்.
தங்கவயல் முழுதும் 4 கோடி ரூபாய் செலவில் மின் கம்பங்கள் நிறுவி தெருவிளக்குகளை நகராட்சி பொருத்தியது. இதில் நிறைய முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. பெஸ்காம் அனுமதி பெறாமலேயே, தனியார் கட்டடங்களில் மீட்டர் இல்லாத தெரு மின் விளக்குகள் பொருத்தப்பட்டது தெரியவந்தது.
சுமதி நகரில் உள்ள தனியார் பள்ளியின் சுற்றுச்சுவர் மீதும் மின் விளக்குகள் நிறுவப்பட்டிருந்தன. இதுகுறித்து தலைமை ஆசிரியரிடம் பெஸ்காம் அதிகாரிகள் விளக்கம் கேட்டனர்.
அதற்கு அவர், 'பள்ளிக்கு தேவையான மின் வசதி உள்ளது. மீட்டர் இணைப்பும் உள்ளது. நாங்கள் முறைகேடு செய்யவில்லை' என தெரிவித்தார். இதையடுத்து, சர்ச்சைக்குரிய வகையில் பொருத்தப்பட்ட மின் விளக்குகளுக்கான மின்சாரத்தை பெஸ்காம் அதிகாரிகள் துண்டித்தனர்.