ஹோட்டல்கள் குறித்து புகார்: கியூ .ஆர்., குறியீடு வெளியீடு
ஹோட்டல்கள் குறித்து புகார்: கியூ .ஆர்., குறியீடு வெளியீடு
UPDATED : ஆக 17, 2026 07:39 PM
ADDED : ஆக 17, 2026 06:22 PM
பெங்களூரு: கர்நாடகாவில், ஹோட்டல்கள் குறித்து வாடிக்கையாளர்கள் புகார் அளிக்க, 'கியூ.ஆர்.,' குறியீடுகளை சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ளது.
கர்நாடகாவில், முதல்வர் சிவகுமார் தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. பெங்களூரு உட்பட மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள ஹோட்டல்களில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களாக சோதனை நடத்தி வருகின்றனர். இதில் பல ஹோட்டல்களில் அழுகிய இறைச்சி, காய்கறிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சோதனையில், பெங்களூரில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களும் சிக்கின.
கர்நாடக அரசின் தலைமை செயலக வளாகத்தில் உள்ள ஹோட்டலுக்கு, 'சீல்' வைக்கப்பட்டது. இதுபோன்ற சோதனைகள் தொடர்ச்சியாக நடக்கின்றன.
இந்நிலையில், 'ஹோட்டல்களில் கெட்டுப்போன உணவு வழங்கப்பட்டால், கியூ.ஆர்., குறியீடுகள் மூலம் வாடிக்கையாளர்கள் சம்பந்தப்பட்ட ஹோட்டல் மீது புகார் அளிக்கலாம்' என, சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதற்கான, கியூ.ஆர்., குறியீடும் வெளியிடப்பட்டு உள்ளது.
'இந்த கியூ.ஆர்., குறியீடுகள், ஹோட்டல்களில் வாடிக்கையாளர்களுக்கு தெரியும் வகையில் கட்டாயம் காட்சிபடுத்த வேண்டும்' என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 'புகார்கள் வரும் ஹோட்டல்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்' எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
